” உசிலம்பட்டி அருகே இரு அரசு பேருந்துகளின் நடுவே சிக்கி அபே ஆட்டோ விபத்துக்குள்ளானதில் - 4 பெண்கள் படுகாயமடைந்தனர், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உசிலம்பட்டியிலிருந்து - எம். கல்லுப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தை உசிலம்பட்டியிலிருந்து வி.பெருமாள்பட்டி நோக்கி சென்ற அபே ஆட்டோ முந்த முயன்ற நிலையில் எதிர்பாராதவிதமாக எதிரே இராஜபாளையத்திலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து  என இரு அரசு பேருந்துகளின் நடுவே சிக்கி விபத்துக்குள்ளானது., இதில் அபே ஆட்டோவில் பயணித்த வில்லாணியைச் சேர்ந்த இந்துராணி,  வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த குருவம்மாள், சின்னம்மாள், கருப்பாயி என்ற 4 பெண்கள் படுகாயமடைந்தனர்., 

 





4 பெண்கள் படுகாயம்:


 

அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அரசு மருத்துவமனையில் படுகாயமடைந்த 4 பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடுமையான விபத்தில் 4 பெண்களும் உயிர் தப்பியது ஆறுதல். மேலும் இது குறித்து  தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ ஒட்டுநரை தேடி வருகின்றனர். இரு அரசு பேருந்துகளின் நடுவே அபே ஆட்டோ சிக்கி விபத்துக்குள்ளான கண்காணிப்புக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 




இது குறித்து சமூக ஆர்வலர் செந்தில் கணேஷ் கூறுகையில், ” உசிலம்பட்டி பகுதியில் அதிகளவு ஷேர் ஆட்டோக்கள் செயல்படுகிறது. இவர்களில் பலரும் ஆட்டோக்களை அலங்கரித்துக் கொண்டு அதிக சத்தத்துடன் பாடல்கள் போட்டுக்கொண்டு விரைவாக ஓட்டுகின்றனர். திடீர் என்று ஆட்களை பார்த்துவிட்டால் சாலையில் திடீர் என்று நிறுத்துகின்றனர். இது போன்ற செயல்களால் அதிகளவு விபத்துகள் ஏற்படுகிறது.

 

அதே போல் ஷேர் ஆட்டோக்களில் அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இது போன்று விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கோரிக்கைகள் விடுத்தனர்.