திண்டுக்கல் வெள்ளபொம்மன்பட்டி கிராமத்தில் மே 19 ம் தேதி நடைபெறவுள்ள கோவில் திருவிழாவில் பட்டியல் இன மக்கள் வழிபாடும் வகையில் நடவடிக்கை கோரிய வழக்கில் திருவிழா கொண்டாடுவதில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். - நீதிபதிகள்

 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி கிராமத்தில் ஶ்ரீபகவதி அம்மன், ஶ்ரீ காளியம்மன், ஶ்ரீ முத்தாலம்மன், ஶ்ரீ மாரியம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள இந்த கோயில்களில்  ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மே 19 ஆம் தேதி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை, கோயில் திருவிழாவில் பங்கேற்கவும், கழுமரம் ஏறுதல் மற்றும் படுகளம் போடுதல் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அனுமதிப்பதில்லை.  கோயில் திருவிழாவிற்கு வரியும் வாங்குவதில்லை. எங்கள் மீது தீண்டாமை வன்கொடுமை இந்த வடிவத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வேடசந்தூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதில், பங்கேற்கவில்லை. அதிகாரிகளும் பிற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். ஆகவே, மே 19ஆம் தேதி நடக்க இருக்கும் கோவில் திருவிழாவில் பட்டியல் இன மக்கள் வழிபாட அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார் 

 

 

தீண்டாமை ஏற்புடையதல்ல

 

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. வேடசந்தூர் தாசில்தார் தலைமையில் அமைதி கூட்டம் நடைபெற்பது, அனைத்து தரப்பு நிர்வாகிகளும்  பங்கேற்றனர். கோவில் திருவிழாவில் பட்டியலின மக்களோடு அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து திருவிழா கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டது என அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். 75 ஆண்டுகளுக்கு ஆன பிறகும் சில பகுதிகளில்  தீண்டாமை  நடைபெறுவது , பாகுபாடு பார்ப்பது  ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பின் பாதுகாக்க நீதிமன்றம் உள்ளது என தெரிவித்த நீதிபதிகள் தற்போதும்  சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. ஒரு மனிதன்,  மற்றொரு சக மனிதனை பாகுபாடு பார்பது ஏற்புடையது அல்ல என கருத்து தெரிவித்த நீதிபதிகள்  திருவிழா கொண்டாடுவதில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திருவிழாவின் பொது  எந்த வித சட்டம் ஒழுங்கு   பிரச்சினை  ஏற்படாமல்  வருவாய்துறை மற்றும்  காவல்துறையினர்  பார்த்து கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.