மனைவியின் பிரசவ காலத்தில் அவருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருப்பதற்காக தந்தைக்கு விடுமுறை வழங்க தனி சட்டம் உருவாக்குவது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பான வழக்கில் தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் பி. சரவணன் தாக்கல் செய்த மனுவில், ‘எனது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டது. இதனால் அவருடைய பிரசவ காலத்தில் நான் உடன் இருப்பதற்காக மே 1 முதல் 90 நாட்கள் விடுமுறை அளிக்குமாறு காவல் துறை உதவியாளர் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தேன். அதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி எனக்கு வழங்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்தனர். இதை எதிர்த்து, நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதில் எனக்கு விடுமுறை அளிக்க பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எடுத்து மே 1 முதல் 30 நாட்கள் எனக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

 



இந்த நிலையில் மே 31 அன்று எனது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அன்றைய தினம் என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பினேன். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல், காவல்துறை சட்ட விதிகளை பின்பற்றாமல் நான் ஓடி விட்டதாகவும் அதற்கான விளக்கம் அளிக்க எனக்கு அழைப்பானை அனுப்பி இருந்தனர். இந்த விளக்க அழைப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவில்,

 


 

நீதி சாஸ்திரத்தில் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது துணையாக இருப்பவர், அறிவு ஞானத்தை அளிப்பவர், உணவு வழங்குபவர், பயத்தில் இருப்பவர்களை பாதுகாப்பவர் தந்தையாக கருதப்படுவார் என தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக தந்தையருக்கான விடுப்பு (மனைவியின் மகப்பேறு காலத்தில்) பேசப்பட்டு வருகிறது. மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது தந்தையும் உடன் இருப்பது மிக அவசியம். பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாய் தந்தை இருவருக்கும் விடுப்பு வழங்கப்படுகிறது. ஒரு குழந்தையை வளர்ப்பதில் தாய் தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவில் மனைவி மகப்பேறு காலத்தில் தந்தையருக்கான விடுப்பு அளிக்கும் சட்டம் இல்லை. ஆனால் சென்ட்ரல் சிவில் சர்வீசஸ் (விடுமுறை) விதியில் தந்தையருக்கான விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. இதை இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் அமல்படுத்தவில்லை. எனவே மகப்பேறு காலத்தில் மனைவியுடன் தந்தை உடன் இருப்பதற்கு தனி சட்டம் உருவாக்குவது அவசியமாக உள்ளது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பொறுப்புள்ள தந்தையாக செயல்பட்டுள்ளார். எனவே அவருக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட அழைப்பானை ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவர் கடையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் சேர உத்தரவிடப்படுகிறது என்றார் நீதிபதி.