மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திங்கள்கிழமை வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல்

 

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி, பொன்மேனி ஜீவனா  மற்றும் வேலம்மாள் போதி கேம்பஸ்பள்ளி, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள KMR ஆகிய நான்கு பள்ளிகளில் கடந்த திங்கள்கிழமை வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலமாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று மதுரை சின்னசொக்கிகுளம் JC RESIDECY மற்றும் காளவாசல் ஜெர்மானூஸ், பெரியார்பேருந்து நிலையம் மதுரை ரெசிடன்சி மற்றும் பெருங்குடி அமீகா ஆகிய  4 நட்சத்திர தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயிலில் மிரட்டல் வந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டம்  திங்கள் கிழமை பேச்சிகுளம் பகுதியில் உள்ள மதுரை பப்ளிக் பள்ளிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அவசர அவசரமாக மாணவர்கள் பெற்றோர்கள் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

 


 

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மாணாக்கர்கள் அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்

 

செவ்வாய்கிழமை மதுரையில் நான்காவது வெடிகுண்டு மிரட்டல் சம்பவமாக மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அரபிந்தோ மீரா பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நேரில் சென்று சோதனை நடத்தியதில் எந்த வெடிப்பொருட்களும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மாணாக்கர்கள் அவசர அவசரமாக பெற்றோர்கள் உதவியுடன் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

மீண்டும், மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் - 5வது முறையாக மிரட்டல்

 

இதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மாவட்டத்தில் 5 முறையாக  மதுரை செட்டிகுளம் மதுரை பப்ளிக் ஸ்கூல், ஜன்னா பள்ளி,  கருப்பாயூரணி அருகே உள்ள டிவிஎஸ் லட்சுமி  ஸ்கூல்,  மகாத்மா கேம்பிரிட்ஜ் மற்றும் மகாத்மா பள்ளி ஆகிய 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக  இ-மெயில் மூலமாக  மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் எந்த வெடிப்பொருட்களும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக  ஏராளமான பெற்றோர்கள்  பள்ளியின் முன்பாக குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. விரைவாக குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.