அரசியல் சட்ட உரிமைக்கு எதிராக பேசியதோடு, மதநல்லிணக்கத்தை குலைக்கும் விளைவிக்கும் வகையில் பேசிய பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதோடு, போராட்டத்திலும் ஈடுபடுவோம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டியளித்தார்.

 

பவன் கல்யாண் மீது வழக்கறிஞர் புகார் - டிஜிட்டல் ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

 

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இரு மாநில மக்களிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக கூறி கடந்த 4ஆம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக புகார் மனுதாரரான வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு சைபர் கிரைம் காவல்துறை சார்பில் அழைப்பாணை அனுப்பபட்ட நிலையில், மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்நிலைய அலுவலகத்தில் வாஞ்சிநாதன் விசாரணைக்கு நேரில் ஆஜராகி புகார் தொடர்பாக விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து பவன்கல்யாண் மீதான புகார் தொடர்பாக பவன்கல்யாண் பேசிய வீடியோ, செய்திதாள்கள், ஜனசேனா கட்சியின் யூடியப் பக்கத்திற்கான லிங்க் ஆகிய டிஜிட்டல் ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

 


 

மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பவன் கல்யாண் பேசியுள்ளார்

 

விசாரணை முடிவடைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...,” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை எதிர்க்கும் வகையில் மிரட்டும் தொனியில் பேசியதோடு திருப்பதி லட்டு விவகாரத்தில் தொடர்பே இல்லாத இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் குறித்து பேசி மதரீதியாக பேசியதோடு, இரண்டு மாநில மக்களிடையே மோதலை தூண்டும் வகையிலும் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பவன் கல்யாண் பேசியுள்ளார். எனவே முந்தைய உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பவன் கல்யாண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சுட்டிகாட்டியுள்ளேன், வழக்குப்பதிவு செய்வார்கள் என  நம்புகிறேன்.
  

 

பவன்கல்யாண் 3 திருமணம் செய்துள்ளளார் இது சனாதானமா?

 

வழக்குப்பதிவு செய்யாத நிலையில் நீதிமன்றத்தை நாடுவதோடு, போராட்டத்தையும் நடத்துவோம் எனவும் அரசியல் சட்ட உரிமைக்கு எதிராக பவன் கல்யாண் தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்து திமுக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் பவன் கல்யாணின் பேச்சுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று பவன் கல்யாணின் பேச்சுக்கு தமிழக ஆளுநர் ஆதரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து சனாதானத்திற்கு ஆதரவாக சாதி மத கட்டமைப்பிற்கு ஆதரவாக பேசி வருகிறார், பவன்கல்யாண் 3 திருமணம் செய்துள்ளளார் இது சனாதானமா?  இதனை ஆளுநர் ஏற்றுக்கொள்வாரா?  ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார். இதனை அரசியல் கட்சிகள் கண்டிப்பதில்லை” எனவும் தெரிவித்தார்.