டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி இடங்களோடு, 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8932 ஆக அதிகரித்துள்ளது.


அரசுப் பணிகளில் அடிப்படைப் பணிக்கான குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.


15.8 லட்சம் பேர் எழுதிய தேர்வு


6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் என்று அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 15.8 லட்சம் பேர் தேர்வை எழுதினர். 2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும்  ஜூன் 9ஆம் தேதி 7247 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.


8932 ஆக உயர்வு


6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. இதன் மூலம் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலி இடங்களின் எண்ணிக்கை, 6,724 ஆக உயர்ந்தது. 


இந்த நிலையில் இன்று (அக்.9) மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8932 ஆக அதிகரித்துள்ளது.


கட் -ஆஃப் என்னவாகும்?


காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேவையான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




எந்தெந்த பதவிகளுக்கு எவ்வளவு காலி இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன என்ற விவரத்தை https://www.tnpsc.gov.in/Document/English/Addendum%201B.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/