சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில், தொழிலாளர் சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கினர். தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும், இந்த கோரிக்கையை சாம்சங் நிர்வாகம் நிராகரித்தது. இந்த சூழலில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 900க்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கிடையே,  சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் சிலர் தொழிலாளர்கள் என்ற போா்வையில் உள்நுழைந்து, திசை திருப்ப முயற்சி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, போராட்டத்திற்கு சென்ற ஊழியர்களை காஞ்சிபுரம் போலீசார், தடுத்து நிறுத்தி பேருந்தில் அடையாள அட்டை சோதனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்சங் ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசின் இந்த செயல் சமூக செயற்பாட்டாளர்களிடம் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. தற்போது திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தமிழக அரசியல் செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்


சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு பா ரஞ்சித் ஆதரவு






“தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!!” என ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.