நிதிநிலை அறிக்கை போல ஆண்டுதோறும் தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மூன்று ஆண்டுகளில் 5,000 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேசியது


மதுரை அதிமுக சார்பில் பேறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கல்லுப்பட்டியில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது...,” அம்மாவின் ஆட்சி காலங்களில் காவல்துறை இங்கிலாந்து ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்தது. காட்டு கொள்ளையன் வீரப்பனை சுட்டு வீழ்த்தியது அம்மாவின் ஆட்சியில் தான். ஆனால் இன்றைக்கு காக்கிச்சட்டை கண்டு காவாலிகள் பயப்பட மறுக்கிறார்கள். அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பிஐ முடியை பிடித்து இழுத்துள்ளனர். அதேபோல் குடிபோதையில் காவலரை தாக்கி உள்ளனர். இன்றைக்கு காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இன்றைக்கு உள்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கு பொறுப்பாவார், காக்கிச்சட்டை மதிப்பு அதிமுக ஆட்சி காலத்தில் கம்பீரமாக இருந்தது.

தமிழகத்தில் கொலைகள் அதிகரித்து வருகிறது


அதேபோல் தமிழகத்தில் கொலைகள் அதிகரித்து வருகிறது. 2021-2022 ஆண்டுகளில் 1558 கொலைகளும், 2022-2023 ஆண்டுகளில் 1596 கொலைகளும், 2023-2024 ஆண்டுகளில் 1600 கொலைகள் என மூன்று ஆண்டுகளில் 5,000 கொலைகள் நடைபெற்றுள்ளது. சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் முதியோர் உதவி தொகையில் 4200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டது, என்று தான் அறிவிப்போம். ஆனால் இன்றைக்கு இந்த மூன்றாண்டுகள் 5000 கொலைகள் நடைபெற்றது, என்று வாசிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை கைகள் இன்றைக்கு கட்டப்பட்டுள்ளன. ஒரே நாளில் 60 ஐபிஎஸ் அதிகாரி மாற்றம், 45 ஐஏஎஸ் அதிகாரி மாற்றம் இதைத்தான் செய்கிறார்கள், ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் கொலை வழிப்பறி ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. காவல் துறை அதிகாரிகளையும், ஐஏஎஸ் அதிகாரி மாற்றம் செய்ய வேண்டாம் ஸ்டாலின் ஆட்சியை மாற்றம் செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் என்று மக்களே கூறுகிறார்கள்.

 

எனக்கு நடிக்கத் தெரியாது


கப்பலூர் டோல்கேட் பிரச்னையில் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் நான் நடிக்கிறேன் என்று என்னை கூறுகிறார்கள். எனக்கு உழைக்க தெரியும், நடிக்க தெரியாது. டோல்கேட் பிரச்னை குறித்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு நாள் கூட போராட்டம் நடைபெறவில்லை, மேலும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில்  கட்டண விலக்கை ஏற்படுத்தி தந்தவர் எடப்பாடியார். தற்போது சுங்கச்சாவடியை அகற்ற மக்கள் எங்களை அழைக்கிறார்கள். அமைச்சர்கள் பேச்சின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை.

 

பருப்பு இல்லை, பாமாயில் இல்லை


 

திருமங்கலம் தொகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது, 100 நாள் வேலை திட்டத்தை கூட தராமல் ஒரவஞ்சனை செய்கிறார்கள். ஒரு பைசா கூட மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்கப்படவில்லை. இதை எல்லாம் கண்டு கொதித்துப் போன மக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணிக்கு 10,050 வாக்குகளை கூடுதலாக பெற்று தந்தார்கள். அதே போல் ரேஷன் கடைகளில் தரமான அரிசிகளை போட முடியவில்லை, பாமாயில் இல்லை, பருப்பு இல்லை இதை கேட்க கூட நாதி இல்லாமல் உள்ளது.” என்று குற்றம் சாட்டினார்.