Train Ticket Booking: வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டை, நாளை ஐ.ஆர்.டி.சி இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.


பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு:


வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 10ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளையும், ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ய வரும் 13ம் தேதியிலும், ஜனவரி 12ம் தேதிக்கு வரும் 14ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15ம் தேதியும் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.


ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?



  • ஐ.ஆர்.சி.டி.சி., இணையதள முகவரியில் உங்களது விவரங்களை முதலில் பதிவு செய்யுங்கள்

  • உங்களது கணக்கில் லாக்-இன் செய்யுங்கள்


  • உங்கள் பயண விவரங்களை உள்ளிடவும். இதில் எங்கு இருந்து எங்கு செல்ல வேண்டும், பயண தேதி ஆகியவை அடங்கும்




  • கிடைக்கக்கூடிய ரயில்களின் பட்டியலிலிருந்து உங்களுக்கான ரயிலைத் தேர்ந்தெடுக்கவும் 




  • பயணிகளின் விவரங்களை உள்ளிடவும்




  • உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்தவும்




  • டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்துங்கள்




  • உங்கள் இ-டிக்கெட்டை அச்சிடவும் அல்லது சேமிக்கவும்




IRCTC மொபைல் செயலியைப் பயன்படுத்தியும் நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.


2025ம் ஆண்டு பொங்கல் விவரங்கள்:


ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட,  சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும். அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14ம் தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15ம் தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16ம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த டிக்கெட் முன்பதிவுகள், தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.


பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால், ரயில்களில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.