சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை அடுத்த  மணிமுத்துாறு பகுதியில் இருந்து சட்ட விரோதமாக இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடப்பதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவேகம்பத்தூர் பகுதியில் பகலில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை காவலர்கள் விரட்டி பிடிக்க முயற்சிக்கும் காட்சி வாட்ஸ் ஆப்பில் வெளியாகி வைரல் ஆனது.



சினிமாவை மிஞ்சும் அளவில் உள்ள இந்த காட்சியில் அதிவேகமாக செல்லும் மணல் லாரியின் பின்புறம் கதவு திறந்து மணல் சிதறுவதும், விபத்து ஏற்படும் வகையில் லாரி ஓட்டுநர் வாகனத்தை ஓட்டும் பரபரப்பு காட்சி வெளியாகியானது. மணல் லாரிக்கு பாதுகாப்பாக தி.மு.க கொடி கட்டி கார் ஒன்றும் சென்றுள்ளது.  இச்சம்பவத்தில் தி.மு.க கொடி கட்டிய காரின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் பிறகட்சியை சேர்ந்தவர்கள், தி.மு.க வில் பொறுப்புகளில் இல்லை என சொல்லப்பட்டது.  இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார்.

 



 


 

 

இந்நிலையில் விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள்  தேவகோட்டை அருகே புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விஜயன் மற்றும் சிறுநல்லூரை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இருவரையும் 

கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுக நல்லூரில் பதுங்கியிருந்த

பிரபுவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தல் லாரியையும் பறிமுதல் செய்த போலீஸார் முக்கிய குற்றவாளியான விஜயனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் இது குறித்து மதுரை வழக்கறிஞர் ப.ஸ்டாலின் கூறுகையில்..,” பொதுவாக காரில் ஸ்டிக்கர் ஒட்டுவது, கொடிகட்டுவது, என பல்வெறு விசயங்களுக்கு 2019-ல் உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. ஆனால் பலரும் கார்களில் கொடிகளை சட்டவிரோதமாக கட்டிச்செல்கின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடவும், அதிகாரிகளை மிரட்டவதற்கும் இவ்வாறு கொடிகளை கட்டிக்கொள்கின்றனர். எனவே சாலை, போக்குவரத்துறை அதிகாரிகள் நீதிமன்ற அறிவுறுத்தலை பின்னற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.