மதுரை : மூச்சுத்திணற திணற முட்டிமோதிய பிரியாணி பிரியர்கள் : ஐந்து பைசா பிரியாணி கடைக்கு சீல்..!

கொரோனா விதிமுறையை பின்பற்றாமல் செயல்பட்ட பிரியாணிக் கடைக்கு, மதுரை மாநகராட்சி அதிகாரி கடைக்கு சீல் வைத்தனர்.

Continues below advertisement
மதுரை  செல்லூர் பகுதியில் 'தெற்குவாசல் சுகன்யா பிரியாணி'  என்று பெயரில்  பிரியாணி கடை என ஒரு கடை நேற்று திறக்கப்பட்டது. அது தொடர்பாக  செல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை திறப்பு விழா குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த போஸ்டரில் பழைய, செல்லாத ஐந்து பைசா நாணயத்தை கொண்டு வருபவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 
இதனை தொடர்ந்து நேற்று  திறப்பு விழா என்பதால் வீட்டிலிருந்த செல்லாத ஐந்து பைசா நாணயங்களை சேகரித்து மக்கள் செல்லூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். மதியவேளையில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் 5 பைசா நாணயத்தை கையில் வைத்துக்கொண்டு பிரியாணி வாங்குவதற்கு கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சமூக இடைவெளி இன்றி முகக்கவசம் இல்லாமல் 5 பைசா நாணயத்தை கொண்டுவந்து பிரியாணி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்கள், அலைமோதிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பிரியாணி கடையின் இரும்புக் கதவை இழுத்து மூடினார்கள். தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து கூட்ட நெரிசலை போக்குவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, கூட்டமாக குவிந்து இருந்த மக்களை அப்பகுதியில் இருந்த அப்புறப்படுத்தினர்.

 
இந்நிலையில்  விளம்பரப்படுத்தும் நோக்கோடு 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்வதாக கூறி, உரிய கொரோனா விதிமுறைகளை  பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்பனை செய்ததற்காக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இது மட்டுமல்லாமல் உரிய விளக்கம் அளிக்க கோரி உரிமையாளருக்கு நோட்டீஸ் வாங்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள்  சிலர், “தங்களது புதிய கடை விளம்பரம் வேண்டும் என பல்வேறு இடங்களில் புதிய யுக்திகளை கையாள்கின்றனர். ஆனால் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இப்படி கூட்டும் கூட்டுவது எந்த விதத்தில் நியாயம்? பிரியாணிக்காக மக்கள் எந்த அச்சமின்றி குவிந்தது கசப்பான உண்மை. எனவே பிரியாணிக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola