மதுரையில் களைகட்டிய  ஞாயிற்றுக்கிழமை புறா சந்தை - வளர்ப்பு பிராணிகளை வாங்க குவிந்த பொதுமக்கள் - வெள்ளை எலி தொடங்கி வெளிநாட்டு பறவைகள் முதல் நாட்டுக் கோழிகள் வரை விற்பனை அமோகம்.

 

மதுரையில் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை புறா சந்தை

 

மதுரை மாநகரில் சிம்மக்கல் வைகையாற்றின் வடகரை பேச்சியம்மன் படித்துறைபகுதியில் ஞாயிற்றுக்கிழமை புறா சந்தை வாரந்தோறும் செயல்படும். இங்கு வளர்ப்பு பிராணிகள் பறவைகள், குருவிகள், மயில் புறா, வெளிநாட்டுப் பூனை, லவ் பேர்ட்ஸ், ஆஃப்ரிக்க பறவைகள், சண்டை சேவல், வெள்ளை எலி, முயல், வாத்து, காடை, வளர்ப்பு வண்ண மீன்கள், பப்பி நாய் குட்டி, கூண்டுகள், வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுகள்  உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படும்.

 

மதுரை தேனி,  திண்டுக்கல் , விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் ஏராளமானோர் ஓரே இடத்தில் கூடுவதால், ஏராளமான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை புறா சந்தைக்கு வருகைதருவார்கள்.
  

 


 

புறா சந்தையில் இளைஞர்கள், சிறுவர்கள் பொதுமக்கள் குவிந்தனர்.

 

இந்நிலையில் நேற்று காலை தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை புறா சந்தையில் ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் பொதுமக்கள் குவிந்தனர். தங்களுக்கு தேவையான வளர்ப்பு பிராணிகளை ஏராளமான சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

 

அப்போது இளைஞர்கள் சேவல்களை வாங்கும்போது சண்டையிடவைத்து சோதனை அடிப்படையில் சண்டை சேவல்களை வாங்கிச் சென்றனர். ஒரு புறாவின் விலை 200 ரூபாயில் தொடங்கி வகை வாரியாக 2 ஆயிரம் ரூபாய் வரைக்கும், சேவலானது ஆயிரம் ரூபாய்க்கு தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

செல்லப்பிராணி விரும்பிகளை சந்திக்க முடியும்

 

இது குறித்து செல்லப்பிராணிகள் வாங்க வந்த இளைஞர், மேலூர் சிவ பாலன் கூறுகையில்,”மதுரையில் ஞாயிற்றுக்கிழமை சந்தைகள் என்பது பிரபலமானது. சிம்மக்கல் தமிழ்சங்கம் சாலையில் இயங்கும் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் பழைய வீட்டு உபயயோக பொருட்களை வாங்க முடியும். நாம் வாங்கமுடியாது என்று நினைக்கும் அனைத்து பொருட்களும் அங்கே கிடைக்கும். அதேபோல்தான் சிம்மக்கல் வைகையாற்றின் வடகரை பேச்சியம்மன் படித்துறைபகுதியில், ஞாயிற்றுக்கிழமை புறா சந்தை வாரவாரம் நடைபெறும். இந்த சந்தையில் ஏராளமான செல்லப்பிராணி விரும்பிகளை சந்திக்க முடியும்.

 

நமக்கு தேவையான செல்லப்பிராணி மற்றும் அதற்கு தேவையான உணவு, கூண்டு என அனைத்தும் கிடைக்கும். நான் சில நேரம் எதுவும் வாங்கவில்லை என்றாலும் இந்த சந்தைக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துக்கொள்வேன். இந்த வாரம் எங்கள் கடைக்கு தேவையான வளர்ப்பு மீன்கள் வாங்கினேன். கண்டிப்பாக மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்லவும்” என்றார்.