தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். விஜயும் அவரது அரசியலும் பல ஆண்டுகளாக பல்வேறு விவாதங்களையும் அவர்கள் அரசியலுக்கு வருவார் என்கிற சலசலப்பையும் அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தி வந்த நிலையில், எப்போது அரசியல் கட்சியை நடிகர் விஜய் அறிவிக்க போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வகைக்கும் விதமாக ‘தமிழக வெற்றி கழகம்’ (Tamizhaga Vetri Kazhagam) என்ற தன்னுடைய கட்சியை அறிவித்து அரசியலுக்கு காற்புள்ளி வைத்திருக்கிறார் விஜய்.
நடிகர் விஜய் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, சிறப்பு பரிசுகளை வழங்கி உதவிகள் செய்ததிலிருந்து தொடர்ந்து மக்களை நோக்கி விஜய் நேரடியாக நகர்ந்து வருகிறார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பொழுது கூட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மக்கள் பணி செய்ய நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை மற்றும் நிவாரண உதவிகள் கொடுப்பதில் தொடங்கி, கனிமொழி, சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வரை தனது சினிமா ஷெடுல்களுக்கு , மத்தியில் பொது வாழ்க்கையிலும் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.
தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற புதிய அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், நேற்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயின் அரசியல் வருகை அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டரில் அனைத்து கட்சிகளின் கொடி வண்ணங்களில் ஆன வார்த்தைகளில் "கழகங்கள் இனி கதறும் உன்னைப் பற்றி, திலகங்கள் உனக்கு இட இனிமேல் வெற்றி" 2026 நாளைய தீர்ப்பு என சட்டமன்றம் அடங்கிய புகைப்படத்துடன் ஆன போஸ்டரை மதுரையில் பல்வேறு பகுதிகளில் கட்சியினர் ஒட்டி உள்ளனர்.