தடை செய்யப்பட்ட பொருட்கள்


 

மதுரை - புனலூர் ரயிலில் இருந்த தனியார் சுற்றுலா ரயில் பெட்டியில், சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அடுப்புக்கரி, சமையல் அடுப்பு ஆகியவை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. தீ விபத்து அபாயத்தை தவிர்க்கும் வகையில் ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர், ஸ்டவ், மண்ணெண்ணெய்,  பெட்ரோல், அமிலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது 1989 ஆண்டு ரயில்வே சட்டப்  பிரிவுகள் 67, 164 மற்றும் 165 -ன் படி தண்டிக்கப்படுவார்கள்.

 

அடுப்புக்கரி கண்டுபிடிப்பு


 

இவற்றையும் மீறி மதுரை - புனலூர் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலுக்கு பயன்படுத்த அடுப்புக்கரி, சமையல் அடுப்பு ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. இவை கடந்த புதன்கிழமை (மே 29) அதிகாலை திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தானை சேர்ந்த தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்த்தும் (64) கைது செய்யப்பட்டார். வடக்கில் இருந்து வந்த இந்த சுற்றுலா ரயில் பெட்டியில் 59 பயணிகள் பயணித்தனர். மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று அதிகாலை சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலின் போது தீப்பற்றி 9 பயணிகள் உயிரிழந்தனர். இதற்குப் பிறகு சுற்றுலா ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்திய திருநெல்வேலி வர்த்தக பிரிவு ஆய்வாளர் எம்.அரவிந்த், சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த அடுப்புக்கரியை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார்.

 

நடவடிக்கைகள்


 

சட்டபூர்வ மேல் நடவடிக்கைக்காக தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்தை திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார்.  சுற்றுலா ரயில் பெட்டிகள் பதிவு செய்யும் போதே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல மாட்டோம் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழி வாங்கப்படுகிறது. இதையும் மீறி எதிர்வரும் அபாயத்தை உணராமல் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இது மாதிரியான சட்ட விரோத செயல்களில் சுற்றுலா நிறுவனம் ஈடுபடுகிறது. இவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, அபராதம், ஏற்பட்ட சேத மதிப்பு ஆகியவை விதிக்கப்படுகின்றன. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில் நிலையங்களில் பதாகைகள் அமைப்பது, அடிக்கடி பொது அறிவிப்புகள் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், சக பயணிகள் யாராவது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருந்தால், அது பற்றிய தகவல்களை உடனடியாக ரயில்வே உதவி எண் 139 -க்கு தெரிவிக்கவும். தீ விபத்துகளை தவிர்க்க ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயணிகள் ரயில்களில் ஏற்றப்படும் சரக்குகளும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டே அனுப்பப்படுகின்றன என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.