கொரோனாவில் ஆரம்பித்த அடைக்கலம் ஆலமரமாக மாறிவிட்டது 

 

மதுரையில் திருநகர் பக்கம் என்ற அமைப்பு  சேர்ந்து பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 12 வருடமாக மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடுவது முதல் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவது வரை பல்வேறு அறம் சார்ந்த பணிகளை இந்த இளைஞர் அமைப்பு செய்து வருகின்றனர். ஊர்வனம், திருநகர் பக்கம், அடைக்கலம் என பல இயக்கங்களாகப் பிரிந்து தேவையான இடத்தில், தேவையான உதவிகளை செய்கின்றனர். மதுரை மாவட்டத்தின் வளர்ச்சியை  சார்ந்தும், இயற்கை சூழல் சார்ந்தும் பல விடயங்களை முன் நின்று செய்து வருகின்றனர்.

 


 

சமூக ஆர்வலர் பலரும் பாராட்டு

 

இந்நிலையில் திருநகர் பக்கம் அமைப்பு அடைக்கலம் என்ற  பெயரில் இலவச முதியோர் இல்லத்தை நடத்தி வந்த சூழ்நிலையில், வாடகையை கட்டிடத்தில் இருந்து தற்போது சொந்த கட்டிடமாக மாற்றி அமைத்துள்ளனர். கிட்டத்தட்ட 92 லட்சம் ரூபாய்க்கு இடம், கட்டிடம் என சகல வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லத்தை பலரின் உதவியோடும் வங்கியில் கடன் வாங்கியும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதனால் இவர்களை மதுரை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பலரும் பாராட்டிய வருகின்றனர்.

 

வாடகைக் கட்டடம் முதல் சொந்த அடைக்கலகம்

 

இது குறித்து சமூக ஆர்வலர் விஸ்வா கூறுகையில்...,” இந்த அடைக்கலம் முதியோர் இல்லம் கொரோனா காலகட்டத்தில் சேவையாக தொடங்கியது. சாலை ஓரம் ஆதரவற்ற முதியவர்களுக்கு மருந்து கொடுப்பது, உணவு கொடுப்பது, போர்வை, சால்வை என்று பல உதவிகள் செய்தோம். ஆதரவற்ற அவர்களை ஒரு வீட்டில் தங்க வைக்க வேண்டும் என வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்தோம். தொடர்ந்து பல இடங்களில் ஒருவரிடம், இரண்டு வருடம் என வாடகைக்கு இருந்த சூழ்நிலையில் தற்போது சொந்தமாக இடம் வாங்கி கட்டடம் கட்டி அடைக்கலம் முதியோர் இல்லமாக அமைத்துள்ளோம்.  கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இந்த கட்டத்தை நீதி அரசர் ஜி.ஆர்.சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த அடைக்கலம் முதியோர் இல்லம் பலருக்கு உபயோகமாக இருக்கிறது. தற்போது 25 நபர்கள் இருக்கும்படியாக இந்த இடம் இருக்கிறது. இதற்கு பலரும் உதவியாக இருந்துள்ளனர்.

 

அடுத்த கட்டத்திற்கு நகரும் அடைக்கலம்

 

தனியார் பள்ளி தனியார் மருத்துவமனை சமூக அலுவலர் என எக்கச்சக்க நபர்கள் இதற்கு உதவியை செய்துள்ளனர். அவர்களால் தான் இது சாத்தியமாகியுள்ளது. வங்கிப் பணம், கையில் இருந்த பணம், உதவி கிடைத்தது பணம் என பலவற்றின் சேர்த்து இதை உருவாக்கியுள்ளோம். தரைதளம் மட்டும் தற்போது உருவாக்கப்பட்டு ஒரு ஹால், பாத்ரூம் என போதி வசதியுடன் அடைக்கலம் உருவாக்கினோம். அடுத்த கட்டமாக படுக்கையில் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு தேவையான கட்டிடமானது உருவாக உள்ளது. இதனை விரைந்து செய்ய உள்ளோம் எனவும் தெரிவித்தார்.