மதுரையில் வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை  அகற்ற 10ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிப்பொறியாளர் கைது.


மதுரை மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டது மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


மதுரை மாநகராட்சி 56- வது வார்டு பகுதியில் வசிக்கும்  கணேசன் என்பவர் தனது வீட்டின் முன்பாக நீண்ட நாட்களாக  கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்காத நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கழிவுநீர் தனது வீட்டின் முன்பாக தேங்கி இருப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 56- வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி பொறியாளர்  விஜயகுமார் வீட்டின் முன்பாக தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற  பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

 




 

இதுகுறித்து கணேசன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கணேசனிடம் கொடுத்து அனுப்பினர். இதையடுத்து 56- வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக உதவிப் பொறியாளர்  விஜயகுமார் பெற்றபோது மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

மதுரை மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டது மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் தெரிவிக்கையில், ”மதுரை மாநகாராட்சியில் தற்போது அல்ல, பல வருட காலமாக லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத நபர்கள் சிலர் தைரியமாக முன் வரும்போது மட்டுமே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மாநகராட்சியில் பலரும் தங்களது பணிகளை விரைவாக முடித்துக்கொள்ளவேண்டும் என்று லஞ்சத்தை கொடுக்கின்றனர். சிலருக்கு மாநகராட்சியில் அதிக அளவு லாபம் கிடைப்பதால் தங்கள் பணிக்கு லஞ்சக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதாகவும் புகார்கள் உள்ளது. எனவே தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தை கண்காணித்து, சட்ட விரோதமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதே போல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் தடுக்க புகார் பெட்டி ஒன்றை வைத்து அதில் பொதுமக்களிடம் ரகசிய புகார்கள் பெறவேண்டும். அப்போது பல தவறுகள் வெளிச்சத்திற்கு வரும்” என்றனர்.