மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது ஹர்தா மாவட்டம். இந்த மாவட்டத்தில் வசித்து வருபவர் மாணிக்சந்த். அவருக்கு வயது 55. அவருடைய மனைவி ராம்பாய். அவருக்கு வயது 50. இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஷால் தோங்ரே (26), இரண்டாவது மகன் (24) மற்றும் கடைசி மகன் அனில் டோங்ரே (23) உள்ளனர்.


விஷால் தோங்ரே அதே பகுதியில் வசித்து வந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். ஆனால், அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், விடாமல் அந்த பெண்ணுக்கு தொல்லை அளித்து வந்த விஷால்டோங்ரே அந்த பெண்ணின் எண்ணுக்கு ஆபாச குறுந்தகவலை அனுப்பி வந்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் தனது சகோதரனிடம் இதுதொடர்பாக கூறியுள்ளார்.




இதையடுத்து, அந்த பெண்ணின் சகோதரர் இந்த விவகாரம் தொடர்பாக மாணிக்சந்த் – ராம்பாயிடம் கூறியுள்ளார். மேலும், விஷாலின் தம்பிகளிடமும் இதுதொடர்பாக இந்த விவகாரம் தொடர்பாக கூறியுள்ளார். ஆனால், அவரது குடும்பத்தினர் விஷாலுக்கே ஆதரவாக பேசியுள்ளனர். இதனால், கோபமடைந்த அந்த பெண்ணின் சகோதரர் விஷால் தொடர்ந்து இதேபோன்று செயல்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அந்த இளம்பெண்ணும், அவரது சகோதரரும் வீட்டில் இருந்தனர். அப்போது, திடீரென அவரது வீட்டிற்கு விஷால்,  அனில் மற்றும் சஞ்சய் மூன்று பேரும் அரிவாளுடன் வந்தனர். அவர்கள் அந்த இளம்பெண்ணின் சகோதரனான 20 வயதே நிரம்பிய வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த இளைஞரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.




அண்ணன், தம்பி மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டியதில் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்தில் சரிந்தார். மேலும், தனது சகோதரியின் கண்முன்னே அந்த இளைஞர் பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். வீடு புகுந்து இளைஞரை வெட்டிக்கொன்ற அண்ணன், தம்பிகள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளிகளின் குடும்பத்தினரின் வீட்டை இடிக்க வலியுறுத்தி வருகின்றனர். பா.ஜ.க. ஆளும் வட இந்திய மாநிலங்களில் குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சகோதரிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞரை எச்சரித்த இளைஞரை வீடு புகுந்து அண்ணன், தம்பிகள் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: கொலை செய்யப்பட்டாரா முன்னாள் எம்பி மஸ்தான் ..? திடீர் திருப்பமாக 4 பேரிடம் காவல்துறை விசாரணை..!


மேலும் படிக்க: ‘என் மகளிடம் பேசாதே’..... கண்டித்த தந்தை....ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல் - தஞ்சையில் பரபரப்பு