இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை சரமாரி குற்றம்சாட்டியுள்ளது.


பாதுகாப்பு விதிகளை ராகுல் காந்தி மீறியதாகவும் ஆனால், காவல்துறை தரப்பில் முற்றிலுமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு டெல்லி காவல்துறை அறிக்கை சமர்பித்துள்ளது.


முன்னதாக, இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஆகியவை அறிக்கை தாக்கல் செய்தது.


காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் எழுதிய கடிதத்தில், "சனிக்கிழமை அன்று டெல்லியில் நுழைந்த நடைபயணத்தின்போது பாதுகாப்பில் பலமுறை குளறுபடி ஏற்பட்டது.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இசட்+ பாதுகாப்பு ஒதுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை பராமரிப்பதிலும் தோல்வி அடைந்தது.


நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், காங்கிரஸ் தொண்டர்களும், ராகுல் காந்தியுடன் நடந்து செல்லும் யாத்ரிகளும் பாதுகாப்பு வளையத்தை அமைக்க வேண்டியிருந்தது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டெல்லி காவல்துறை பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர்.


நடைபயணத்தில் பங்கேற்றவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் (Intelligence Bureau) விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநில உளவுப்பிரிவைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், நடைபயணத்தின் கன்டெய்னர்களுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர்.


இது தொடர்பாக, ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல அரசியலமைப்பு உரிமை உள்ளது" என குறிப்பிடப்பட்டது.


டெல்லியில் நடைபயணத்தின்போது ராகுல் காந்தி பாதுகாப்பு நெறிமுறைகளை பல சந்தர்ப்பங்களில் மீறியதாக சிஆர்பிஎஃப் அமைப்பு விளக்கம் அளித்திருந்தது.


"ராகுல் காந்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில காவல்துறை மற்றும் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து சிஆர்பிஎஃப் செய்து வருகிறது. டிசம்பர் 24 நடைபயணத்திற்கான கூடுதல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே நடத்தப்பட்டது. 


நடைபயண தினத்தன்று அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. போதுமான அளவு பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.


பாதுகாவலர்களே வகுக்கப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் போது, ​​பாதுகாவலருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. 


இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், வகுக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை ராகுல் காந்தி தரப்பில் பலமுறை மீறப்பட்டது தெரிய வந்தது. இது, அவரிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் ராகுல் காந்தி 113 முறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியுள்ளார்" என சிஆர்பிஎஃப் தெரிவித்திருந்தது.