Uttarakhand HC: கர்ப்பிணியாக இருப்பதால் ஒருவருக்கு வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கும், பெண்மைக்கும் எதிரானது என்று உத்தரகாண்ட் நீதிமன்றம் கூறியுள்ளது


கர்ப்பிணிக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதா?


உத்தர காண்ட் மாநிலத்தில் குடும்ப நல இயக்குநரகம் செவிலியருக்கான நியமனக் கடிதம் கொடுத்த நிலையில், கர்ப்பமாக இருப்பதால் தற்காலிகமாக பணிக்கு தகுதியற்றவர் என்று கூறி, மிஷா உப்பத்யாய் என்ற 13 வார கர்ப்பிணியை பணிக்கு  அமர்ந்த  நைனிடால் நகரில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனை மறுத்துவிட்டது. 


மிஷா உப்பத்யாய்க்கு மருத்துவமனை அளித்த சான்றிதழில், கர்ப்பமாக இருப்பதால் நீங்கள் பணிக்கு தகுதியற்றவர். கர்ப்பத்தைத் தவிர வேறு எந்த ஒரு உடல்நலப் பிரச்னைகளும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கர்ப்பமாக இருப்பதால்  தன்னை வேலைக்கு அமர்த்த மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததை எதிர்த்து, கர்ப்பிணி மிஷா உப்பத்யாய் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த மனு நீதிபதி பங்கஜ் புரோஹித் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்ப்பத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு மறுப்பதில் உள்ள முரண்பாட்டை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதே சமயம், மகப்பேறு விடுப்பை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது நீதிமன்றம். 


"கர்ப்பிணிக்கு வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது”


இருதரப்பு வாதங்களை பதிவு செய்த கொண்ட நீதிபதி பங்கஜ் புரோஹித், "பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு இருக்கிறது. எனவே, கர்ப்பிணி பெண்கள் ஏன் புதிதாக பணியில் சேர முடியாது? சேர்ந்த பிறகு, அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க அவர்கள் தகுதி உடையவர்கள்.


கர்ப்பிணியாக இருப்பதால் ஒருவருக்கு வேலை மறுக்ககப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது. பெண்மைக்கும் எதிரானது. தாய்மை என்பது ஒரு வரம். புதிதாக பணிக்கு அமர்த்தப்படும் ஒருவர் தாய்மை  அடைந்த பிறகு அவருக்கு பேறுகால விடுப்பு அளிக்கப்படும் போது, கர்ப்பிணிக்கு ஏன் வழங்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினார். 


இதனை தொடர்ந்து, 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்களை 'தற்காலிகமாக தகுதியற்றவர்கள்' என்று கருதும் மாநில அரசின் விதியும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  விதியின்படி, பிரசவ தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் சம்பந்தப்பட்ட பெண்ணை பரிசோதித்து, உடற்தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 


மருத்துவமனையில் வேலை கிடைத்தும் கர்ப்பமாக இருப்பதால் தற்காலிகமாக பணிக்கு தகுதியற்றவர் எனக்கூறி வேலை மறுக்கப்பட்டதை அடுத்து, மிஷா உப்பத்யாய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.




மேலும் படிக்க


PM Modi Speech: தேசியத்தின் பக்கம் நிற்கும் தமிழகம்: பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!


Theni Lok Sabha constituency: தேனி மக்களவைத் தொகுதி - யாருக்கு சாதகம்? ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி., செய்தது என்ன?