உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது எடா மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது நிதாவ்லிகலான் பகுதி. இந்த பகுதியில் உள்ள மிஷகரி கிராமத்தில் வசித்து வருபவர் நரேந்திரா.  இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு 17 வயதும், இரண்டாவது மகளுக்கு 16 வயதும் ஆகிறது. நரேந்திரா காசியாபாத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்.


மன உளைச்சல்:


இந்த நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை அந்த 16 வயது சிறுமி விரும்பியதாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக பழகி வந்த நிலையில், திடீரென அந்த இளைஞர் கடந்த 24-ந் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த இளைஞரின் மரணம் 16 வயதே ஆன அந்த சிறுமியை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.


இதனால், மன உளைச்சலில் இருந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரை அவரது தாயார் அனுராதாவும், அவரது அக்காவும் காப்பாற்றியுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக நரேந்திராவிற்கு அனுராதா தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த நரேந்திரா கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.


குடும்பமாக தற்கொலை:


பின்னர் தொலைபேசியிலே தனது மனைவி அனுராதா மற்றும் மகள்களை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அனுராதாவும், அவரது மகள்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தனது குடும்பத்தின் நிலை கருதி மிகவும் வருத்தப்பட்ட அனுராதா வீட்டின் ஒரு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தங்களது தாய் தற்கொலை செய்து கொண்டதை கண்ட மகள்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கனவே இருந்த மன உளைச்சல் மற்றும் தாயின் தற்கொலையால் வேதனைக்கு ஆளான இருவரும் வீட்டின் உள்ளேயே தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது மூன்று பேரும் சடலமாக இருந்துள்ளனர். பின்னர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மேலே கூறிய தகவல்கள் தெரியவந்தது.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நரேந்திராவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


மேலும் படிக்க: Crime: எவ்வளவோ முயற்சித்த போலீஸ்..! ஜஸ்ட் மிஸ்ஸான கொள்ளையர்கள்.. 10 நாள் கழித்து காத்திருந்த ட்விஸ்ட்..! நடந்தது என்ன ?


மேலும் படிக்க: Crime: போட்டோக்களுக்கு ரிவியூ தந்தால் பணம்... 95 ஆயிரத்தை அபேஸ் செய்த கும்பல்.. அதிகரிக்கும் சைபர்கிரைம்..!