எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்:


2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமாக, பாட்னாவில் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் மார். அதைதொடர்ந்து, அண்மையில் காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய என பெயரிடப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


தாமதமாகும் 3வது ஆலோசனைக் கூட்டம்?


கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டத்தை மும்பையில் நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். அதன்பேரில், ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் மும்பையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த தேதிகளில் வேறு வேலைகள் இருப்பதால், தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என சில தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகளின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், தேதியை மாற்றுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் துவரை வெளியாகவில்லை. 


சிவசேனா விளக்கம்:


உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி தான் ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 25-26 தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் சில கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பதில் உள்ள சிக்கல் குறித்து அக்கட்சியினரிடையே விசாரிக்கப்பட்டது. அதற்கு, ”26 கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஜுன் மாதம் பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போதும் இந்த சிக்கலை நாங்கள் எதிர்கொண்டோம். இருப்பினும், திட்டமிட்டபடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவோம்” என சிவசேனா மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


சரத் பவாரின் திட்டம் என்ன?


பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் சரத் பவார் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தான், அவரது கட்சியை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் உடன் பாஜக கூட்டணியில் இணைந்து அஜித் பவார் நிதியமைச்சர் பதவியை பெற்றுள்ளார். இதனிடையே, வரும் 1ம் தேதி புனேவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவருக்கு விருது வழங்க உள்ளார் சரத் பவார். இதனால், அவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் நீடிப்பாரா அல்லது பிரிந்து சென்று பாஜகவில் சேர்ந்துவிடுவாரா என்ற குழப்பம் கூட்டணியை சேர்ந்த பல கட்சி தலைவர்களிடையே நிலவுகிறது. இதனால், 3வது ஆலோசனைக் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பாரா என்பதே சந்தேகமாக உள்ளது.