சாலையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்:


திருப்பதி அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த கருவுற்ற பெண், உதவிக்காக தன்னுடன் யாரையும் அழைத்து வராததால், மருத்துவமனை நிர்வாகம் அவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, வலியால் துடித்து சாலையில் விழுந்துள்ளார்.


உடனடியாக அருகிலிருந்தவர்கள் போர்வை ஆகியவற்றை திரையை போன்று பயன்படுத்தி, அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதையறிந்து அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக பெண்ணையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.






மருத்துவமனை நிர்வாகத்திற்கு குவியும் கண்டனங்கள்:


எந்த சூழலிலும் பிரசவம் ஏற்படும் நிலையில் மருத்துவமனைக்கு வந்த பெண், உதவியாளர் இன்றி வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியானதும்,  பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


#IdhemKarmaManaRashtraniki எனும் ஹேஷ்டேக்கும் சமூகவலைதளங்களில் வைரலானது. பெண்ணிற்கோ அல்லது அந்த சிசுவிற்கோ ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் யார் பொறுபேற்று இருப்பார்கள் எனவும், மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடும், பெண்ணிற்கு சாலையில் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம், அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


விளக்கம் கேட்டுள்ள அரசு:


ஆந்திராவில் இந்த சம்பவம் பெரும் பேசுபொருளான நிலையில், உதவியாளர் யாரும் இல்லாததால் பெண் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் பொய்யானது என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதனிடையே, சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, ஆந்திர மாநில சுகாதார அமைச்சகம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


கர்நாடகாவில் பலியான கருவுற்ற பெண் பலி:


சமீபத்தில் கர்நாடகாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஆதார் மற்றும் சிகிச்சை தொடர்பான மருத்துவ அட்டை இல்லாததால், தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், வீட்டிற்கு திரும்பிய அந்த பெண் அங்கேயே இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து உயிரிழந்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே இரட்டை குழந்தைகளும் பலியாகின. இந்த சோகமே பொதுமக்களிடயே மறையாத நிலையில், ஆந்திராவில் உதவியாளர் இல்லாததால் பெண்ணுக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.