ஹாசன் மாவட்டத்தின் அர்சிகெரே தாலுகாவில் உள்ள பாகிவாலு கிராமத்தில் தன்னை தாக்க வந்த சிறுத்தையை இளைஞர் ஒருவர் துணிச்சலுடன் பிடித்து காலில் கயிற்றை கட்டி, பைக்கில் வைத்து ஊருக்குள் எடுத்து வந்துள்ளார். வேகமாகச் செயல்பட்ட அவர், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் காட்சியைப் போல, பயங்கரமான வேட்டையாடும் மிருகத்தை தனது பைக்கில் அசால்ட்டாக கட்டி கொண்டு வந்துள்ளார், பின்னர் உடனடியாக அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.


வாழ்விடங்களுக்கு வரும் விலங்குகள்


சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள உலகமயமாக்கலின் காரணமாக, வனங்கள் பல மனித வாழ்விடங்களாக மாற, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தைத் தேடி மனித வாழ்விடங்களுக்குள் நுழைவது கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. பாகிவாலு கிராமத்தில் நடந்த சம்பவம், இதுபோன்ற சந்திப்புகள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.


முத்து (35) என்ற விவசாயி பண்ணைக்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே சிறுத்தை வந்துள்ளது. தைரியமாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், உயிரைக் காக்கவும் துணிச்சலாக அதோடு போராடி சிறுத்தையையும் பிடித்துள்ளார்.



தாக்க வந்த சிறுத்தை


அந்த வீரனின் கைகால்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் தனது பைக்கில்விவசாய பயன்பாட்டிற்காக வைத்திருந்த கையிற்றை உடனடியாக எடுத்து, தாக்கும் நோக்கில் சீறிப்பாய்ந்த சிறுத்தையை சாமர்த்தியமாக வலையில் சிக்க வைத்தார். பாதுகாப்பாக அதனை கட்டுப்படுத்தியதால், அதனை அதனால் அவரை தாக்க முடியாமல் போனது. புத்திசாலித்தனமாக தன் உடல் பாகங்களிலிருந்து கயிற்றை அவிழ்த்து, அடக்கப்பட்ட சிறுத்தையின் நான்கு கால்களைச் சுற்றிப் பாதுகாப்பாகக் கட்டிய அவர், கூடுதல் சப்போர்ட்டுக்காக குச்சிகளை பயன்படுத்தியுள்ளார். அவர் கட்டிய கட்டு பொதுவாக பன்றிகளை பிடித்தபின் கட்டும் முறை போல இருந்ததாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: IND Vs WI: மேற்கிந்திய தீவுகளை பொட்டலம் கட்டிய இந்தியா, அஸ்வின் மாயாஜாலம்..! இன்னிங்ஸ் & 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி


மாஸாக ஊருக்குள் வந்த இளைஞர்


பிடிபட்ட விலங்கை தனது பைக்கின் பின்புறத்தில் சாதுரியமாக வைத்து எடுத்து வந்துள்ளார். சினிமாவில் ஹீரோக்களை பூதாகரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் காட்சியை, ரியலாக செய்த அவர், முகத்தில் வெற்றியின் பெருமை பீறிட, வீரனாக கிராமத்திற்குத் திரும்பினார். சிறுத்தையை ஒற்றைக் கையால் எதிர்கொண்ட வீரம் மிக்க முத்து என்ற வேணுகோபால், பாகிவாலு கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவரது வீரச் செயலை அங்கீகரித்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் அவருக்குத் தேவையான முதலுதவிகளை உடனடியாக வழங்கினர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிராமம் மற்றும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்கள் சிறுத்தையை கையகப்படுத்தி சென்றனர்.



சிறுத்தைக்கு சிகிச்சை


துணிச்சலின் இந்த பிரமிக்க வைக்கும் கதை தனிநபர்கள் தங்கள் சமூகங்களைப் பாதுகாக்க எவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறது. வேணுகோபாலின் துணிச்சலான செயல், பாகிவாலு கிராமத்தில் இனி ஆண்டாண்டுகளுக்கு ஒரு மாவீரன் கதையாக நிலைபெறும், கொண்டாடப்படும் என்பதில் ஐயமில்லை. சத்தேனல்லி கால்நடை மருத்துவர் பிரசாந்த், கால்நடை மருத்துவமனையில் சிறுத்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சிறுத்தைப்புலிக்கு பிளேட்லெட் பற்றாக்குறை இருப்பது ரத்த பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். ஹாசன் டிசிஎஃப் ஆஷிஷ் ரெட்டி கூறுகையில், மூன்று நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு விலங்கு காட்டுக்குள் விடப்படும். சிறுத்தை 9 மாத வயதுடைய பெண் எனவும், பசியுடனும், பலவீனமாகவும் உள்ளதால், பிடிக்கும் போது தாக்குப்பிடிக்க முடியவில்லை எனவும், பல நாட்களாக அந்த சிறுத்தை சாப்பிடாமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.