உலகம் முழுவதும் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்கள் வளர்த்து வருகின்றனர். நாய்களில் பல வகையான நாய்களை மக்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். தற்போது, இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் பிட்புல் நாய் செல்லப்பிராணியாக வளர்ப்பதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.


பிட்புல் நாய்:


மிகவும் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் ஆக்ரோஷமாக காணப்படும் இந்த பிட்புல் நாய்கள் பார்ப்பதற்கு மிகுந்த அச்சுறுத்தலான தோற்றத்துடன் காணப்படும். இதனால், இதை வளர்ப்பதில் சில சிரமங்களும் உள்ளது. பல நேரங்களில் இந்த நாய் தெருவில் செல்பவர்களை கடித்து குதறிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது ஹரியானாவில் அரங்கேறியுள்ளது.


ஹரியானாவில் அமைந்துள்ளது கர்னல். இந்த பகுதியில் அமைந்துள்ளது பிஜ்னா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ளவர் வசித்து வந்த பிட்புல் நாய் இந்த இளைஞரை பார்த்து குரைத்துள்ளது. பிட்புல் நாய் குரைப்பதை கண்டு பயந்து போன அந்த இளைஞர் தப்பித்து ஓடியுள்ளார்.



அந்தரங்க உறுப்பில் கடி:


ஆனால், அந்த பிட்புல் நாய் அந்த இளைஞரை விடாமல் துரத்திச்சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் கடித்தது. அந்த இளைஞரின் அந்தரங்க உறுப்பை கவ்விப்பிடித்த பிட்புல் நாய் சரமாரியாக கடித்தது. இதில், அந்த இளைஞர் படுகாயமடைந்தார்.


இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரை மீட்டு கரவ்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.  ஆனால், அங்கு தடுப்பூசிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து படுகாயமடைந்த அந்த இளைஞர் கர்ணல் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தொடரும் தாக்குதல்கள்:


தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளைஞரின் உடல்நிலை குறித்து மருத்துவர் அளித்துள்ள விளக்கத்தில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் கூறினார்.


இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறையினருக்கு எந்த புகாரும் பெறப்படவில்லை. கடந்த 7-ந் தேதி பிட்புல் நாய் தாக்கியதில் சட்டீஸ்கர் மாநிலத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சமீபகாலமாக பிட்புல் நாய்களின் தாக்குதல் சம்பவத்தால் மனிதர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை அதிகரித்து வருவது அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: ABP Nadu Anniversary: சிறப்புமிக்க 3-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஏபிபி நாடு.. வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்


மேலும் படிக்க: எதிர்காலத்தை நோக்கிய நீண்ட பயணத்திற்கு வாழ்த்துகள்...ஏபிபி நாடு குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து..!