Just In





Trunkless Baby Elephant: கேரள வனப்பகுதியில் தும்பிக்கையின்றி சுற்றித் திரியும் குட்டி யானை...
கேரள மாநில வனப்பகுதியில் தும்பிக்கையின்றி சுற்றித்திரியும் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநில வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அவைகள் தொந்தரவின்றி வாழ்வதற்கு ஏதுவான சூழலை கேரள வனத்துறை செய்துள்ளது. மேலும் உடல்நலம் பாதித்து அவதிப்படும் யானைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தேவையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில், குட்டியானை ஒன்று கடந்த சில மாதங்களாக திரிந்து வருகிறது. அந்த குட்டி யானைக்கு துப்பிக்கை இல்லை. அந்த குட்டி யானையை 4 முறை பொதுமக்கள் பார்த்துள்ளனர். ஆனால் இதற்கு முன் பார்த்ததைவிட, தற்போது அந்த யானை மிகவும் சோர்வான நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
யானைக்குட்டிகளுக்கு 5 முதல் 6 வயது வரை அதன் தாய் பாலூட்டும். இதனால், இந்த குட்டியானை தன் தாயிடம் இருந்து பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த யானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருப்பதால் மற்ற யானைகளை போன்று அனைத்து உணவுகளையும் வழக்கம்போல் உண்ண முடியாத நிலையில் அது பால் குடிப்பதை நிறுத்தி இருக்கலாம் என்றும், அதன் காரணமாக அந்த யானை உடல்நிலை மோசமடைந்து சோர்வாக காணப்படலாம் என்றும் யானை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் அந்த குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தும்பிக்கையற்ற அந்த குட்டி யானைக்கு 4 வயது இருக்கும் என கால்நடை மருத்துவர்கள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த குட்டியானையில் உடற்பகுதியில் ஒரு வெட்டுக்காயம் உள்ளதாகவும், அது பிறப்புக் குறைப்பாடு அல்லது விபத்தில் நேர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, அதிரப்பள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையில் யானை கூட்டம் ஒன்று இருப்பதைக் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அப்போது அந்தக் கூட்டத்தில் தாய் யானையுடன் இருந்த ஒரு குட்டி யானை தும்பிக்கை இல்லாமல் உணவு உட்கொள்ள முடியாமல் சிரமத்துக்குள்ளானதை கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததுடன், யானை குட்டிக்கு சிகிச்சை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானை கூட்டத்திலிருந்து குட்டியை பார்த்த பொழுது தும்பிக்கை இல்லாமல் ஒரு குட்டி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட வன அலுவலர் லட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுட்டது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த தும்பிக்கையற்ற யானைக்குட்டியை தொடர்ந்து கண்காணிக்க தொடங்கினர்.
மேலும் படிக்க,
கரூர் பொறுப்பு அமைச்சர்களாக இவர்களா..? ரேசில் அமைச்சர் நேரு - சக்கரபாணி.. அமைச்சராகிறாரா இளங்கோ..?