Breaking News LIVE: மதுரையில் கொட்டித்தீர்க்கும் கனமழை; 50 இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆர்த்தி Last Updated: 09 May 2023 06:33 PM
மதுரையில் கொட்டித்தீர்க்கும் கனமழை; 50 இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

மதுரையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினர். 

Breaking News LIVE: பாஜக பிரமுகர் கொலை வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம்

வில்லியனூர் பாஜக பிரமுகர் செந்தில்குமரன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பெண்ணை மிரட்டிய வழக்கு: அமைச்சர் சேகர்பாபு மருமகன் கைது

பெண்ணை மிரட்டிய வழக்கில் அமைச்சர் சேகர்பாபு மருமகன் சதீஷை புளியந்தோப்பு போலீசார் கைது செய்துள்ளனர். 

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆளுநர் ஆர்.என் ரவியை சந்துக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.. அமைச்சரவையில் மாற்றமா?

ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு அமைச்சர் துரைமுருகன் செல்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் மாளிகை செல்கிறார். 

சென்னை திருவொற்றியூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை..

சென்னை திருவொற்றியூரில் அப்துல் ரசாக் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் 6-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட போலீசார் உடன் சோதனையில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு. 

600/600 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு தங்கப்பேனாவை பரிசளிக்கும் கவிஞர் வைரமுத்து..

12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூறுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு தான் பெற்ற தங்கப் பேனாவை  பரிசளிக்க உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு..

மத்திய பிரதேசத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு, 25 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் மேலும் 15 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.. தினசரி பாதிப்பு 1,331 ஆக பதிவு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,331 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ. 56 உயர்வு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 45,736 க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத்தத்தின் விலை கிராமுக்கு ரூ. 7 உயர்ந்து ரூ.5,717 க்கு விற்பனையாகிறது. 


அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 6,186 ரூபாயாகவும், ஒரு சவரன் 49,488 ரூபாயுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


வெள்ளி விலை: 


ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ரூபாய் 82.50 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூபாய் 82,500 ஆக விற்பனையாகிறது.

Background

சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி  விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.9) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 353ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.