Breaking Tamil LIVE: இன்னும் சற்று நேரத்தில் முடிவுக்கு வரும் அரசியல் கட்சிகள் பரப்புரை!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

ஆர்த்தி Last Updated: 17 Apr 2024 05:22 PM
இன்னும் சற்று நேரத்தில் முடிவுக்கு வரும் அரசியல் கட்சிகள் பரப்புரை!

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுவதால் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி தலைமையில் வாகன பேரணி

விழுப்புரத்தில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமைச்சர் பொன்முடி தலைமையில் வாகன பேரணி செய்து வருகின்றனர். 

அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Lok Sabha Elections 2024: வெற்றி பெற்றால் 1200 மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுப்பேன் - பாரிவேந்தர்

பெரம்பலூர் தொகுதியில் தான் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், 1200 மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்பேன் என பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

பதிவாளர் நியமனம் - அண்ணா பல்கலைக் கழகம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

அண்ணா பல்கலைக் கழக பதிவாளராக பிரகாஷ் நியமிக்கப்பட்டது தொடர்பாக, உயர்கல்விதுறையும் பலகலைக் கழகமும் பதில் அளிக்கவேண்டும் எனவும், சிண்டிகெட் கூட்ட வீடியோக்களை பத்திரப்படுத்தவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

CM Stalin Campaign : இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள் - முதல்வர் ஸ்டாலின்

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.


இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.


ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.


யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது.


 CM Stalin Campaign : உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.


தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது.


வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள். 


அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!


வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.


இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.


கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள்.  தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.


இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - பிரியங்கா காந்தி

நான் ஜோதிடர் இல்லை. ஆனால் மிக நல்ல அளவிலான சீட்டுகள் வெற்றி பெறுவோம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - பிரியங்கா காந்தி





Breaking Tamil LIVE: தமிழக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்- பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்து தமிழ்நாடு அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழ்நாட்டை நாடகமேடையாக்கி மக்களை ஏமாற்றும் சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
 

Breaking Tamil LIVE: கனமழையால் துபாய்க்கு விமான சேவை ரத்து..!

கனமழையால் சென்னையில் இருந்து ஐக்கிய அரசு அமீரக நாடுகளுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE: ஒடிசா பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக் போட்டி..!

ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் கண்டாபாஞ்சி தொகுதியில் நவீன் பட்நாயக் போட்டியிடுகிறார். ஒடிசா பேர்வை தேர்தலில் போட்டியிடும் பிஐ- ஜனதாதளம் வேட்பாளர்களின் 5வது பட்டியலை வெளியிட்டார் நவீன் பட்நாயக். 

Breaking Tamil LIVE: ஐஜேகே நிர்வாகி வீட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல்..!

திருச்சி லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


 

Breaking Tamil LIVE: ஐஜேகே நிர்வாகி வீட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல்..!

திருச்சி லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வினோத் சந்திரன் வீட்டில் ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


 

Breaking Tamil LIVE: மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை - திமுக குற்றச்சாட்டு

தான் பிரதமரானால் தமிழ்நாடு மீனவர்களை பாதுகாப்பதாக மோடி உறுதி அளித்திருந்தார். ஆனால்,  மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை என்று திமுக குற்றச்சாட்டியுள்ளது.


 

Ram Navami Surya Tilak : ராமர் சிலை நெற்றியில் சூரிய ஒளி.. ஆரத்தி நிகழ்வு

ராமர் சிலை நெற்றியில் சூரிய ஒளி.. ஆரத்தி நிகழ்வு





CM Stalin Chinnamalai Statue :தீரன் சின்னமலை பிறந்தநாளில் இந்தியாவை காக்க உறுதியேற்போம்

Breaking Tamil LIVE: பாஜகவை மக்கள் ஏற்கமாட்டார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாஜகவின் மதவாத அரசியல் கொள்கைகள், வன்முறை செயல்பாடுகளை தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் மக்களவை தேர்தல் களம் என்பது திமுகவுக்கும் அதிமுகவுக்குமான போட்டிதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

Annamalai Road Show : கோவை தொகுதியில் ரோட் ஷோ சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Breaking Tamil LIVE: ஐபிஎல் 2024: குஜராத் - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் 2024ன் 32வது போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Breaking Tamil LIVE: பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி

2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. 2014ல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. 2014க்கு முன் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது - எடப்பாடி பழனிசாமி 

IMF : சர்வதேச நிதியம், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 2024-இல் 6.8% ஆகவும், 2025-இல் 6.5% ஆகவும் அறிவித்துள்ளது

IMF : சர்வதேச நிதியம், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 2024-இல் 6.8% ஆகவும், 2025-இல் 6.5% ஆகவும் அறிவித்துள்ளது





இந்தியாவின் வடபகுதியும், தென்பகுதியும் எவ்வாறு வேறுபடுகிறது? விளக்கும் அமைச்சர் பி.டி.ஆர் பதிவு

இந்தியா முழுவதும் சென்று சேர வேண்டிய இக்காணொளி, தமிழ் மக்களிடம் பெருமளவிற்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காக தமிழ் துணைத் தலைப்புகளுடன். இந்தியாவின் வடபகுதியும் தென்பகுதியும் புவியியல் ரீதியில் மட்டுமல்ல அரசியல், மதம் குறித்த பார்வை மற்றும் பொருளாதார ரீதியில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை சில புள்ளி விவரங்களுடனும் தமது கள ஆய்வின் மூலமும் மிக எளிமையாக விளக்குகிறார், வட இந்தியாவில் பிறந்து ஹாங்காங்கில் வசிக்கும் ஆண்டிமுகர்ஜி என பிடிஆர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..





Naan Mudhalvan Scheme : நான் முதல்வன் திட்டம், நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

நான் முதல்வன் திட்டம், என் திட்டம் அல்ல, நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 2023-ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் 2-வது இடமும் அகில இந்திய அளவில் 78-வது இடமும் பெற்று மருத்துவர் பிரசாந்த், UPSC இலக்கை எட்ட உதவியாக இருந்த ‘நான் முதல்வன்’ திட்டம் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது





Annamalai Crying : வாக்கு சேகரிப்பின்போதே கண்கலங்கிய அண்ணாமலை

இன்று வாக்கு சேகரிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கோவை கஸ்தூரிநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள நானா நானி முதியோர் இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும் முறை பற்றி பேசிய அண்ணாமலை கண்கலங்கினார்

AIMIM - ADMK DMDK : அதிமுக கூட்டணிக்காக 40 தொகுதிகளிலும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம் - ஏஐஎம்ஐஎம் தமிழ்நாடு தலைவர் டி எஸ் வக்கீல் அஹமது

அதிமுக கூட்டணிக்காக 40 தொகுதிகளிலும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம் - அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் தமிழ்நாடு தலைவர் டி எஸ் வக்கீல் அஹமது





DMK Dayanidhi Maran Campaign : தேர்தல் பிரச்சாரம் இன்று ஓயவிருக்கும் நிலையில், திருவல்லிக்கேணியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் தயாநிதி மாறன்

Breaking Tamil LIVE: ஏப்ரல் 19ல் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவுள்ள ஏப்ரல் 19 ஆம் தேதி கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Breaking Tamil LIVE: மீன் வியாபாரியிடம் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர்

சென்னை எண்ணூரில் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த மீன் வியாபாரியிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பைக்கில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Breaking Tamil LIVE: மக்களின் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் - தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ

ஜனநாயகத்திற்கு மக்களின் ஒவ்வொரு வாக்கும் முக்கியமாகும். 100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

Breaking Tamil LIVE: துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை - விமான சேவை பாதிப்பு

துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துபாய் மற்றும் சார்ஜா செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Background

நாடே மிகவும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருக்கும் 40 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. அனல் பறக்கும் தேர்தல் களத்தில் கட்சி தலைவர்கள் இன்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்த வரையில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே என 4 முனை போட்டி நிலவுகிறது. 


 இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர்கள் அனைவரும் நூதன முறையில் பஜ்ஜி சுடுவது, தோசை சுடுவது, ஆட்டோ ஓட்டுவது என வாக்கு சேகரித்து வந்தனர். வீடு வீடாக மக்களுடன் மக்களாக சென்று வாக்கு சேகரித்தனர். மேலும், இன்று கடைசி நாள் என்பதால், தேர்தல் பரப்புரை முடிந்ததும் மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் எக்காரணத்தை கொண்டும் பரப்புரை செய்யவோ, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியிலோ ஈடுபட அனுமதி இல்லை என்றும்,  இந்த பணிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


 அதேபோல், மக்களின் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7,184 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 3,080 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.