Breaking News LIVE: கொளத்தூர் தொகுதியில் பொங்கல் விழா! அன்பளிப்பு வழங்கிய முதலமைச்சர்!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 11 Jan 2024 06:10 PM
அமித்ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்துக்கட்சி குழு!

தமிழக அனைத்துக் கட்சி குழு நாளை மறுநாள் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு உடன்படவில்லை - மம்தா பானர்ஜி

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு உடன்படவில்லை என்று உயர்மட்ட குழுவிற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

பொங்கல் விழா கொண்டாட்டத்தில் மனைவியுடன் பங்கேற்ற முதலமைச்சர்!

கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

சௌகார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - பெண் உயிரிழப்பு

சென்னை சவுகார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார்.

பிப்ரவரி 1... இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

அயோத்திக்குச் செல்வது குறித்து உடல்நிலையைப் பொறுத்துதான் முடிவெடுக்க வேண்டும் - இபிஎஸ்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்குச் செல்வது குறித்து உடல்நிலையைப் பொறுத்துதான் முடிவெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: ராமர் கோயில் விழாவுக்கு செல்வேன் - எடப்பாடி பழனிசாமி

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில்  வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

பெரியார் பல்கலைக் கழகத்தில் பரபரப்பு; ஒருபுறம் நிதித்துறை கூடுதல் செயலர் ஆய்வு; மறுபுறம் ஆளுநர் ஆலோசனை

பெரியார் பல்கலைக் கழகத்தில் நிதித்துறை செயலர் ஆய்வு நடத்திவரும் நிலையில் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Breaking News LIVE: பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த பெரியார் பல்கலைக்கழகம்.. நிதித்துறை கூடுதல் செயலர் ஆய்வு

ஆளுநர் ஆர்.என் ரவி பெரியார் பல்கலைக்கழகம் வருகை தர இருக்கும் நிலையில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக ஆளுநர் இன்று பெரியார் பல்கலைக்கழகம் வர உள்ள நிலையில் துணைவேந்தர் தொடர்புள்ள வழக்கு தொடர்பாக சேலம் மாநகர காவல் துறை சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் பல்கலைக்கழகத்தை ஆய்வு  செய்ய இருக்கும் நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், முறைகேடு புகாரையடுத்து சேலம் பல்கலைக்கழகத்தில் நிதித்துறை கூடுதல் செயலர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

அகமதாபாத் மற்றும் அயோத்தி இடையே முதல் மூன்று வார விமான சேவை

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சர் வி.கே. சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து அகமதாபாத் மற்றும் அயோத்தி இடையே முதல் மூன்று வார விமான சேவையைத் தொடங்குகின்றனர்.





Breaking News LIVE: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் போலீசார் சோதனை 

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வர்த்தக ரீதியாக நிறுவனம் தொடங்கியதாக அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.


தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்த்துறைத் பேராசிரியர் அலுவலகம், கணினி அறிவியல் துறை பேராசிரியர் அலுவலகம் உள்ளிட்ட ஆறு அலுவலகங்களில் போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.


இன்று பிற்பகல் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அலுவலர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பங்கேற்க உள்ள நிலையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்திற்கான போர்டிங் பாஸை பெற்ற யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அகமதாபாத் மற்றும் அயோத்தி இடையே முதல் வாரத்திற்கு ஒருமுறை செல்லும் விமானத்திற்கான போர்டிங் பாஸைப் பெற்றார்.





Breaking News LIVE: தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. 5,000 கனஅடி நீர் திறப்பு..

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் இருக்கு அணைகளில் இருந்து 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.   

Breaking News LIVE: அனுமன் ஜெயந்தி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து

அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அனுமன் ஜெயந்தி முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் இருக்கு பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிப்பாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆளுநர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ஆஞ்சநேயர் ஜெயந்தி திருநாளில், தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பிரபு ஸ்ரீராமரின் தீவிர பக்தரான ஸ்ரீ ஆஞ்சநேயர், வலிமை, ஞானம், சேவை மற்றும் பக்தி ஆகியவற்றின் உருவகம். 2047ஆம் ஆண்டுக்குள் நமது பாரதத்தை முழுமையாக வளர்ச்சியடையச் செய்து, ஒரே குடும்பம் போல் மகிழ்ச்சியுடன் வாழ நமக்கு ஞானம், வலிமை மற்றும் உறுதியை அவர் நமக்கு அருளட்டும்." என குறிப்பிட்டுள்ளார். 






 

Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. 

Breaking News LIVE: பொங்கல்: தாம்பரம் - கோவை இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை ஒட்டு கோவையில் இருந்து தாம்பரத்துக்கு வரும் 16ம், 17ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து ஜனவரி 17, 18ல் புறப்படும் சிறப்பு ரயில்கள், காலை 7.30 க்கு புறப்பட்டு மாலை 4.30 க்கு கோவை சென்றடையும். 

Breaking News LIVE: முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆஜராக உத்தரவு

தமிழ்நாடு அரசை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக வழக்கு - நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  இன்று ஆஜராகிறார். 

Breaking News LIVE: முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆஜராக உத்தரவு

தமிழ்நாடு அரசை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக வழக்கு - நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  இன்று ஆஜராகிறார். 

Breaking News LIVE: பொங்கல் பண்டிகை: கோவை முதல் சென்னை சிறப்பு ரயில் அறிவிப்பு..

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் வகையில் கோவை முதல் சென்னக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 16 ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு 17 ஆம் தேதி காலை சென்னை வந்தடையும். அதேபோல், 17 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்பட்டு அன்று மாலை கோவை சென்றடையும். 

Breaking News LIVE: தமிழ்நாட்டில் ரூ.5000 கோடியில் புதிய தொழிற்சாலைகள்

தமிழ்நாட்டில் ரூ. 5000 கோடியில் புதிய காலணி தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 4 சர்வதேச காலணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என பீனிக்ஸ் கோத்தாரி நிறுவன தலைவர் ரஃபீக் கோத்தாரி அகமது அறிவித்துள்ளார். 


புதிய தொழிற்சாலைகள் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. புதிய தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 


 


 

Breaking News LIVE: நாடாளுமன்றத் தேர்தல் - ஆணையம் இன்று ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்றும் நாளையும் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. 


டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கலந்து கொள்கிறார். 

Breaking News Live: ராமநாதபுரம், தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை  ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


11.01.2024: தமிழக   கடலோரப்பகுதிகள்,    மன்னார்    வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


12.01.2024: குமரிக்கடல் பகுதிகள்,  மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்  பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் 

Breaking News LIVE: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் இன்று பதவியேற்பு

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் இன்று பதவியேற்கிறார் - நேற்று தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முக சுந்தரம் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். 

Breaking News LIVE: சென்னையில் இன்று அயலகத் தமிழர் தின விழா - முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரெட் சென்டரில் இன்றும் நாளையும் அயலகத் தமிழர் தின விழா நடைபெற உள்ளது - இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

Breaking News LIVE: அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: கோடநாடு வழக்கு - இன்று ஆஜராகிறார்  சயான் 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் சயான் - கோவையில் உள்ல அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். 

Background

பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 11ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 600வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 19 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.