கோவை மாவட்டம், மதுக்கரை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கரை ஜே.ஜே.நகர் மலைச்சாமி கோவில் தெருவைச் சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகன் சிவசங்கரன் (15), நேற்று தனது நண்பர்கள் மூவருடன் மதுக்கரை உப்பு பாறை பகுதியில் உள்ள கல்லுக்குழிக்கு குளிக்கச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், நண்பர்களில் இருவருக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் கரையோரத்தில் அமர்ந்திருந்தனர். சிவசங்கரனும் மற்றொரு நண்பரும் கல்லுக்குழிக்குள் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது, குளத்தின் ஆழமான பகுதியில் உள்ள பாறையை தொட்டு விட்டு முதலில் கரைக்கு திரும்புவது யார் என்ற போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, சிவசங்கரன் தொலைவில் உள்ள பாறையை தொட்டு விட்டு கரை நோக்கி திரும்பியபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதைக் கண்ட நண்பர்கள் உடனடியாக கூச்சலிட்டு உதவி கேட்டனர். தகவல் அறிந்த மதுக்கரை காவல் நிலையம் போலீசார் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை - கோவை புதூர் நிலையம் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நேற்று (மார்ச்.03) பிற்பகலில் நடந்த இந்த சம்பவத்தில், இரவு வரை தேடுதல் மேற்கொள்ளப்பட்டும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடுதல் பணி இன்று இரண்டாவது நாளாக தொடரப்பட்டது.
ஆழமான பகுதி என்பதால் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் மேற்கொண்டனர். தற்போது சிவசங்கரனின் உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
