பேருந்து பயணம் முதல், தொட்டில் குழந்தைகள் வரை 'இசைஞானி' இளையராஜாவின் பாடல்களை தாலாட்டாக கேட்டிருப்பார்கள். இப்படி தமிழ் பாடல்களில் பல தவிர்கமுடியாத பாடல்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. இசை அமைத்து பல ஆண்டுகள் கடந்தும், அவரது பாடல்கள் தற்போதும் ஆஹா... ஓஹோ.. என பெருமை கொள்ளப்படுகிறது.



இளையராஜாவின் இசைக்கு இணை இளையராஜா வின் இசைதான் என தற்போது மெச்சுக்கொட்ட வைக்கிறார். இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோ சர்ச்சைக்கு பின் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் எம்.எம்.ஸ்டுடியோவை விலைக்கு வாங்கி, அங்கேயே புதிதாய் தனது ஸ்டியோவைக் கட்டியிருந்தார்.  ’இளைய ராஜா’ என்ற தனது பெயரில் தங்க வார்த்தைகளில் மின்னுவதை கோடம்பாக்கத்தை கடந்து செல்வோர் அண்ணாந்து பார்த்து செல்கின்றனர்.

 

இந்நிலையில் இளையராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இதோ அவரது பேச்சு...

"ஆயிரம் படங்களை கடந்தாலும் இன்னும் புதுமையான விஷயங்கள் சுவாரசியமான போய்க்கொண்டு தான் இருக்கிறது. நான் இன்னமும் இசையமைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னிடம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வருகிறார்கள். கொரோனா காலகட்டம் காரணமாக சினிமாவே கொஞ்சம் டல்லடித்து  தான் உள்ளது. எல்லாமும் சரியாகும் என நம்புவோம். பாடல்கள் எப்போதும் பூக்கள் போல தான் இருக்க வேண்டும். அதனை எப்போது காது கொடுத்து  கேட்டாலும் அது புதிது போல தெரியவேண்டும். பாடல்கள் புதிதாக மெட்டமைக்கப்பட்டது போல மனசு விரும்பவேண்டும். அவ்வாறு சுவாரசியமாக இருப்பதால் தான் மீண்டும், மீண்டும் அந்த பாடல்களை கேட்கிறோம். மனசுக்கு பிடிக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் கேட்கமாட்டோம்.

 




 

புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகளை பாதுகாக்க வேண்டும். பல இடங்களில் பழமையான இசைக்கருவிகள் பாதுகாக்கப்படுகிறது. நாம் அதனை செய்கிறோமா. இசை தொடர்பான பழமையான மரபுகளை காக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் கூட  விவாதித்துள்ளேன். குழந்தைகளிடமிருந்து தான் நாம் கற்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு  நாம் கற்றுக் கொடுப்பதில்லை.  அவர்களுக்கு இசையறிவும், ஆர்வமும் இருப்பது ஆச்சர்யம் இல்லை. எல்லாம் ரத்த உறவுகள்தானே" என குடும்பத்தினர் குறித்து நெகிழ்ச்சியுற்றார்.

இளையராஜா நீண்ட நாட்களுக்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.