காரைக்குடியில் பழ கருப்பையாவின் புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் வழங்கிய சால்வையை நடிகர் சிவகுமார் வீசி எறிந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படியான நிலையில் நடிகர் சிவகுமார் தனக்கு சால்வை வழங்கிய அதே நண்பருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சிவகுமார் சால்வையை வீசி பரபரப்பு


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள  கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா  கடந்த ஜனவரி 25 ஆம் தேதி  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசி முடித்த நடிகர் சிவகுமாரிடம் அங்கிருந்த நபர் ஒருவர் சால்வை ஒன்றை வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட சிவகுமார் அந்த சால்வையை தரையில் வீசி எறிந்தார். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்தை கிளப்பிய நிலையில் சிவகுமார் மற்றும் கரீம் (சால்வை கொடுத்த நபர்) ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று சிவகுமார் விளையாட்டாக அந்த செயலை செய்ததாக கூறப்பட்டது. இப்படியான நிலையில்  நடிகர் சிவகுமார் மற்றும் கரீம் ஆகிய இருவர் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவில் தனது செயலுக்காக நடிகர் சிவகுமார் மன்னிப்புக் கேட்டுள்ளார்.


மன்னிப்பு கேட்ட சிவகுமார்:


இந்த வீடியோவில் தனக்கு சால்வை வழங்கிய கரீம் தனது 50 ஆண்டு  நண்பர் என்று கூறியுள்ளார். மன்னார்குடியில் ஒரு நாடக நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது தான் கரீமை சந்தித்ததாகவும் அன்றிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் கரீமுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததே நான் தான் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கரீமின் பேரன் பேத்திகளையும் தான் பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.  சால்வை அணிவிப்பது தனக்கு பிடிக்காத ஒரு நடைமுறை என்றும் அது தெரிந்தும் தனது நண்பர் சால்வையை எடுத்து வந்தது அவருடைய தவறு. அன்றைய நிகழ்ச்சியில் எல்லாரும் பேசி முடித்து கடைசியில் தான் பேசி  ஏற்கனவே தான் சோர்வடைந்திருந்ததாகவும்  தனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் கரீமை சால்வையுடன் பார்த்து கோபத்தில்  அந்த சால்வையை வாங்கி வீசிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எப்படி சால்வை வாங்கி வந்தது தவறோ அதே போல்  தானும் அப்படி நடந்துகொண்டது தனது தவறு என்று கூறி அதற்காக தான் வருந்துவதாக கூறி மன்னிப்புக் கேட்டுள்ளார் சிவகுமார்.




மேலும் படிக்க : “என் மகள்கள் இப்படிப்பட்ட படத்தை பார்ப்பதை விரும்பவில்லை” - அனிமல் இயக்குநரை வெளுத்து வாங்கிய குஷ்பு!


Soundarya Rajinkanth: “43 வருஷமா ரஜினி - லதா தம்பதி திருமண நாளில் இதை செய்யறாங்க” - மகள் சௌந்தர்யா நெகிழ்ச்சி!