எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், என்ற சினிமா பிரபலங்களின் வரிசையில் விஜய் - அஜித் என்ற பெயர் நிலைத்து நிற்கிறது. இளைய தளபது என ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து அரசியல் நோக்கியும் மெல்ல, மெல்ல காலடி வைத்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் பல இடங்களில் அதிக அளவில் வாக்குகல் பெற்றனர். சில இடங்களில் வெற்றியும் பெற்றனர்.  தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் பல இடங்களில் களம் காண்கின்றனர்.

இந்நிலையில் மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக  88- வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நாகேஸ்வரி ஆதரித்து கேரளாவிலிருந்து நடிகர் விஜய் தோற்றத்தில் உள்ள நபரை அழைத்து வந்து விஜய் ரசிகர்கள் வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் விஜய் தோற்றம் கொண்ட நபரை கண்டு வியந்து பார்த்தனர். சிலர் புகைப்படமும் எடுத்து  மகிழ்ந்து கொண்டனர். பின்பு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் மாஸ்டர் படம் விஜய் பாணியில் ஓடிவந்து பேருந்தில் ஏறி உள்ளே இருக்கும் பயணிகளுக்கு துண்டு பிரசங்கத்தை வழங்கி வாக்குகள் சேகரித்தார். பின்பு அங்கு இருந்த தேனீர் கடையில் வாக்கு சேகரிக்கும் போது வடை சுட்டு வாக்குகளையும் சேகரித்தார். விஜய் போல தோற்றம் கொண்ட நபரை  காண அதிகமான மக்கள் கூடியதால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.