அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், உண்மைத்தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் அளிக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.


கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள்


அரசு நிறுவனங்களில் அலுவலர்களை நியமிப்பதற்கு முன்னால், அவர்கள் படித்த படிப்பு குறித்த உண்மைத்தன்மை சரிபார்க்கப்படுகிறது. இதற்காக அரசு அலுவலகங்கள் பட்டம் பெற்ற சான்றிதழ்களின் தகவல்களை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து கோரும். இதற்கென அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், சுயநிதி பல்கலைக்கழகங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. எனினும் இந்தக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. இலவசமாகவே உண்மைத்தன்மை சரிபார்க்கும் சான்றிதழை வழங்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாம்: Vaaname Ellai: வானமே எல்லை: டிப்ளமோ படித்தும் லட்சங்களில் சம்பாதிக்கலாம்- எப்படி? 


இதுகுறித்து யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி உள்ளதாவது:


''அரசுப் பணியில் நியமனம் செய்யப்படும் அலுவலர்களை உறுதிப்படுத்துவதற்கு கல்வித் தகுதிச் சரிபார்ப்பு ஒரு முன் நிபந்தனையாகும். விண்ணப்பதாரர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நலனுக்கு அவசியமானது. எனவே, இந்த சரிபார்ப்பை இலவசமாக மேற்கொள்வது, தனியார்/ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் கடமையாக இருக்க வேண்டும்.


பலமுறை கட்டணம் கேட்ட கல்வி நிறுவனங்கள்


இதுதொடர்பாக, பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வின் (சிஜிஎல்இ) மூலம் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட உதவிப் பிரிவு அலுவலர்களின் (டிஆர்ஏஎஸ்ஓ) கல்விச் சான்றிதழ் சரிபார்ப்புக்குக் கல்வி நிறுவனங்கள் பலமுறை கட்டணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.


பணியாளர் தேர்வாணையத்தில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ASO-க்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை எந்த அமைச்சகம்/ துறையும் அத்தகைய சரிபார்ப்பை மேற்கொள்வதற்கு கோரிக்கை விடுக்கும் போதெல்லாம், உயர் கல்வி நிறுவனங்கள் இலவசமாகச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்''.


இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.


இதையும் வாசிக்கலாம்: Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்