மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை  பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.





இந்த வழக்கு தொடர்பாக தமிழக முழுவதும் நியோமேக்ஸ் வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு 92 பேர் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.  மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நியோமேக்ஸ்  நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் அவரது சகோதரரும் நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களில் ஒருவருமான சிங்காரவேலன் மற்றும்  மைக்கெல் செல்வி மற்றும் நடேஷ் பாபு உள்ளிட்ட இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.



இதனிடையே நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில் நிறுவனர்களான வீரசக்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் இவர்கள் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில்  தலைமை இயக்குநர்களில் ஒருவரான திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரசக்தி( 45) யை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் மணீஷா தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீரசக்தி மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளராக திருச்சியில் போட்டியிட்டவர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிறுவனர் பாலசுப்பிரமணியத்தின் மகள் லாவண்யா ஆரோ சிட்ஸ் பி.லிட்., இயக்குநராக இருந்தார். இவரும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே கைதான கமலகண்ணன் உள்ளிட்டோர் ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். தங்களிடம் கருத்து கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என முதலீட்டாளர்கள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.