டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருபவர் ரேணு குமாரி. இவருடைய கணவர் ஆனந்த்குமார். இவர்கள் உத்தரகாண்டில் உள்ள ரூர்கியில் உள்ள இவர்களது உறவுக்காரர்களின் 7 வயது மகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.


7 வயது சிறுமி:


அந்த 7 வயது சிறுமி டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறது. இந்த நிலையில், மாணவியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதை அந்த சிறுமியின் ஆசிரியை பார்த்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் ஆசிரியை உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.




இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. சிறுமியை தத்தெடுத்து வந்த நாள் முதல் ரேணு குமாரி அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், இரவு நேரங்களில் கடும் குளிரில் பால்கனியில் ஆடைகளின்றி தூங்க வைத்துள்ளனர். கடந்த டிசம்பரிலும், ஜனவரியிலும் இந்த கொடுமைக்கு சிறுமியை ஆளாக்கினர்.


பாலியல் வன்கொடுமை:


மேலும், இந்த கொடூரம் மட்டுமின்றி சிறுமியை ரேணு குமாரியின் கணவர் ஆனந்த்குமார் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். சிறுமி கடும் பனியிலும், குளிரிலும் ஆடைகளின்றி படுத்து இருந்ததால் சிறுமிக்கு இருமல், சளித் தொல்லையும் ஏற்பட்டுள்ளது. இதனால், உடல்நலக்குறைவால் இருமிய சிறுமியின் நாக்கை கத்தியால் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர்.




மேலும், ரேணுகுமாரி – ஆனந்த்குமாரின் மகனாகிய ஜானும் அந்த 7 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி தகவல் கிட்டியது. சிறுமியின் உடலில் 18 இடங்களில் காயம்பட்டதற்கான தழும்புகள் இருந்துள்ளது.


சித்திரவதை:


இதையடுத்து, சிறுமியை சித்திரவதை செய்த ஜானை போலீசார் கைது செய்தனர். ரேணுகுமாரியும், அவரது கணவருமான ஆனந்த்குமார் தலைமறைவாகியுள்ளனர். 7 வயது சிறுமியை தத்தெடுத்துச் சென்ற பெற்றோர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கடுமையாக சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களிலோ, அல்லது கல்வி பயிலும் இடங்களிலோ பாலியல் வன்கொடுமைகளை சந்திக்க நேரிட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும். பெற்றோர்களும் பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலன் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் அன்றாடம் பள்ளியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க:Crime: காற்றோட்டமாக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்: காத்திருந்து வேலையை காட்டிய இளைஞர்!


மேலும் படிக்க: பிரபல சென்னை ரவுடி சிறையில் தற்கொலை முயற்சி... உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை