மேலுார் அருகே ஆட்டுக்குளம் ஊராட்சி உலகநாதபுரத்தில் தகாத உறவை பார்த்த 5 வயது மகளை கொலை செய்து விட்டு காணவில்லை என நாடகமாடிய தாய், புதுமாப்பிள்ளையை காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மகளை கொலை செய்த தாய் 


மதுரை மாவட்டம் மேலூர் உலகநாதபுரத்தில் வசிக்கும் ’சமயமுத்து - மலர்ச்செல்வி’  தம்பதிக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணமாகி  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. குடும்ப கஷ்டம் காரணமாக சமயமுத்து துபாயில் வேலை செய்துவருகிறார். இவர்களது மகள்கள் கயல்விழி (7-வயது), கார்த்திகா (5-வயது). இந்தநிலையில், நேற்று அவரது இளைய மகள் கார்த்திகா மாயமானதாக கூறி தேடி வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாயமான சிறுமி தேடியபோது தாய் மலர்ச்செல்வியிடம் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளியாகிது. மலர்ச்செல்வி அதே பகுதியை சேர்ந்த உறவினர், வாலிபர்  ஒருவருடன் தகாத உறவில் இருப்பதை இளைய மகள் கார்த்திகாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தவறை மறைக்க மலர்ச்செல்வி, மகள் கார்த்திகாவை கிணற்றில் தள்ளி வீசி கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

 


 

ஊர் திரும்பும் சிறுமியின் தந்தை


 

பின்னர் சிறுமியின் சடலத்தை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட தாய் மலர்ச்செல்வி மற்றும் அவரது கள்ளக்காதலன் தர்ம சுந்தர் ஆகிய இருவரை பிடித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உள்ள கள்ளக்காதலன் தர்மசுந்தருக்கு திருமணம் ஆகி சில (மே-19) நாட்களே  ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது மகள் இறப்பு விவரம் கேட்டு அவரது தந்தை துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி விரைந்து வந்து கொண்டிருக்கிறார்.

 

கொலை செய்து நாடகமாடியது அம்பலம்


 

காவல்துறை வட்டாரங்கள் நம்மிடம்..,”புதிதாய் திருமணமான தர்மசுந்தரத்திற்கும் மலர்ச்செல்விக்கும் நீண்ட நாட்கள் தவறான தொடர்பு இருந்துள்ளது. இந்த தவறான உறவை திடீரென நேரில் பார்த்த சிறுமி கார்த்திகா அப்பாவிடம் போனில் சொல்லிவிடுவேன் எனக் கூறி அழுதுள்ளார். எப்படியும் இந்த தகவலை மகள் கணவரிடம் சொல்லிவிடுவார் என மலர்ச்செல்வி கள்ளக்காதலன் தர்மசுந்தரத்துடன் சேர்ந்து கொலை செய்து கிணற்றில் தள்ளியுள்ளனர். இதனை மறைக்க வேண்டும் என எங்களிடம் நாடகமாடினார். ஆனால் அவர் சொன்ன தகவல்கள் நம்பும் படி இல்லை. இதனால் தீவிர விசாரணை செய்து உண்மையை கண்டறிந்தோம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்