சென்னை தாம்பரத்தில் வழக்கறிஞர் ஒருவர் திருடனுக்கு கடிதம் எழுதி பீரோவில் ஒட்டிவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது


சென்னை கிழக்கு தாம்பரத்தின் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காட்வின். வழக்கறிஞரான இவர் போலீசார் மீதிருந்த அதிருப்தியால் நேரடியாக திருடனிடமே ஒரு விஷயத்தை டீல் செய்துள்ளார். வெளியூருக்கு குடும்பத்துடன் சென்ற அந்த வழக்கறிஞர் தன் வீட்டு பீரோவில் கடிதம் ஒன்றை எழுதி ஒட்டியுள்ளார். அதில்,'' தம்பி. பீரோவை உடைத்து விடாதே. உள்ளே துணிகளை தவிர வேறு எதுவும் இல்லை. எப்படியும் காவல் துறை உன்னை பிடிக்க மாட்டார்கள். சேதாரம் செய்துவிடாதே. நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


Padappai Guna | பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்ததாக ஆயுதப்படை காவலர் கைது




ஏற்கெனவே இரண்டு முறை கொள்ளை போனதால் இந்த கடிதம் எழுதப்பட்டதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியூர் சென்றுள்ளார் காட்வின். அப்போது அவர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. உள்ளே இருந்த 55 சவரன் நகை கொள்ளைபோனது.  இது குறித்து வழக்கறிஞர் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் திருடனை கண்டுபிடிக்கவில்லை. அதேபோல் இவரது வீட்டில் குடியிருந்த  ஜான்பால் என்பவரது வீட்டிலும் 2019ம் ஆண்டு கொள்ளை போனது. அப்போது அதிக பொருட்கள் உள்ளே இல்லாத நிலையில் அரை சவரன் மோதிரம் மட்டும் கொள்ளைபோனது. அந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்கும் பணியையும் போலீசார் தொடங்கினர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில்தான் தற்போது வழக்கறிஞர் நேரடியாகவே திருடனுக்கே கடிதம் எழுதியுள்ளார்.


Video | திசையன்விளை : நள்ளிரவில் புகுந்து 50 சவரன் நகை கொள்ளை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்


இது குறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர், '' என்னுடைய வீட்டில் இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தது. கைரேகை, சிசிடிவி இருந்தும் திருடனை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு வெளியூர் சென்றபோது சேலையூர் போலீசாரிடம் பாதுகாப்புக்கு கடிதம் கொடுத்தேன். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லை என எழுதிக் கொடுக்குமாறு அவர்கள் கேட்டனர். அதனால் இந்த வருடம் அதே கடிதத்தை திருடனுக்கே எழுதிவிட்டேன் என்றார். 


நேரடியாக திருடனுக்கே வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதிய சம்பவம் தாம்பரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண