தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெண்

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் ( 60). பன்னீர்செல்வம் மனநலம் குன்றிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பத்மாவதி (52). இவர்கள் இருவரும் நீலமங்கலம் பகுதியில் வசித்து வருகின்றனர். நீலமங்கலம் பகுதியில் இவர்களுக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சுகந்தி என்பவர் பத்மாவதியின், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளார்.



 

" நான் வாங்கி , விட்டேன் நீங்கள் "

 

எதிர்முனையில் பேசிய சுகந்தி உங்களது வீடு மற்றும் வீட்டு மனை ஆகியவற்றை, '  நான் வாங்கி விட்டேன் நீங்கள் அங்கிருந்து சீக்கிரம் காலி செய்ய வேண்டும் ' என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மாவதி செல்போனிலேயே சுதந்தியிடம்  சண்டை போட்டுள்ளார். இதனை அடுத்து, பத்மாவதி  கடந்த மாதம் 28ஆம் தேதி அணைக்கட்டு காவல் நிலையத்தில், இது குறித்து புகார் அளித்துள்ளனர். புகார் அளித்த பிறகும் அவப்பொழுது, பத்மாவதி சுகந்தியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டி வந்துள்ளார். இதனால் பத்மாவதி, காவல் நிலையம் சென்று இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலர்களிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.



 


 

காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணை

 

இதனைத் தொடர்ந்து அணைக்கட்டு காவல்துறையினர் சுகந்தி மற்றும் பத்மாவதி ஆகிய இருவரையும் , நேற்று மதியம் 12 மணியளவில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்பொழுது மீண்டும் சுகந்தி உங்கள் நிலத்தை நான் வாங்கி விட்டேன் நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளார். அப்பொழுது பத்மாவதி தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த நிலையிலே இருந்துள்ளார். திடீரென பத்மாவதி காவல் நிலையத்திலேயே அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள், காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பத்மாவதி பரிசோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 




உறவினர்கள் சரமாரி புகார்

 

தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். புகார் அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் உடனடி நடவடிக்கை எடுக்காததால், மன அழுத்தத்தில் இருந்த காரணத்தினாலேயே பத்மாவதியின் உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். காவல் நிலையத்தில் விசாரணையின் பொழுது மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.