கழிவுநீர் தேங்கியதால் சாய்ந்த நெல்மணிகள் விளைநிலத்திலேயே மீண்டும் முளைத்து சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

 

கோடை மழை



தமிழகத்தில்  அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.  திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கத்திரி வெயிலின் போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அதேபோல், வெப்ப அலையும் குறைந்துள்ளது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது முதலே நல்ல மழை பதிவாகி வருகிறது.


 மதுரை சுற்றுவட்டாரங்களில் மழை


ஏற்கனவே மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் நிறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் உசிலம்பட்டி அருகே கடந்த நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் காடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது உசிலம்பட்டி நகராட்சியில் சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் மழைநீருடன் கலந்து நெற்பயிருக்குள் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீரில் மூழ்கிய நெல்மணிகள் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


சாக்கடை கால்வாயில் நீர்வரத்து



உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலிருந்து வரும் சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான வடிகால் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை நீடித்து வருகிறது. உசிலம்பட்டி கண்மாய், கவணம்பட்டி, கொங்கபட்டி என பல பகுதிகளில் உள்ள ஊரணிகளில் இந்த சாக்கடை கழிவுநீர் தேங்கி வரும் சூழலில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாக்கடை கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து, மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து உடைப்பு ஏற்பட்டு கொங்கபட்டி ஊரணி அருகே புத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.

 

உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

 

மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து வந்தால் விவசாய நிலங்களில்  பயிரிடப்பட்டிருந்த 3 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கழிவுநீர் தேங்கியதால் சாய்ந்த நெல்மணிகள் விளைநிலத்திலேயே மீண்டும் முளைத்து சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு, சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.