உசிலம்பட்டி அருகே இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் காடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

 

கோடையில் மழை


தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


தென் மாவட்டங்களில் மழை


தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஏற்கனவே மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் நிறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் உசிலம்பட்டி அருகே இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் காடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோடை விவசாயம்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த செல்லம்பட்டி பகுதியில் கிணற்று பாசன முறையில் கோடை சாகுபடியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெற்பயிர்கள் விளைந்து விரைவில் அறுவடைக்கு தயாராக உள்ள சூழலில் கடந்த இரு தினங்களாக உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.


சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு



வின்னக்குடி கிராமத்தில் உடைந்த பாலத்தை சரி செய்ய மனு கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கைகளும் எடுக்காததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் நெற்பயிருக்குள் சென்று சேதப்படுத்தியதாகவும், இதே போன்று கல்கொண்டான்பட்டி, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்ல வழியின்றி விவசாய நிலங்களின் வழியாக சென்று நெற்பயிர்களை அடித்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து, மழைநீர் செல்லும் வழித்தடங்களை சீரமைத்து பாலங்களை அமைத்து தருவதோடு, சேதமடைந்த நெற்பயிர்களையும் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.