சிவகங்கை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலச்சாலூர், கீழச்சாலூர் கிராம பகுதிகளில் கீரை, வாழை, தென்னை, முருங்கை, கடலை, நெல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் தற்போது குறுகிய காலபயிராக முள்ளங்கி பயிரை அதிகளவு விவசாயம் செய்து வருகின்றனர்.






இந்த சூழலில் விவசாயம் செய்யும் தொகை அதிகரித்து முள்ளங்கியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயி நல்லியப்பன் கூறுகையில்..,"பாரம்பரியமாக மூன்று ஏக்கர் விவசாயம் செய்து வருகிறேன். பல்வேறு வகையான பணப்பயிர்கள் விவசாயம் செய்துவரும் சூழலில், 50 செண்டில் முள்ளங்கி பயிர் செய்துள்ளேன். இந்நிலையில் மருந்து மற்றும் உரத்தின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். முள்ளங்கியின் விலை சொற்பவிலைக்கு வாங்கப்படுவதால் பிடுங்கும் முள்ளங்கியை தரையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. வண்டி வாடைக் கூட விலை கிடைக்காமல் இதனை விற்பனை செய்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதனால் பிடிங்கும் முள்ளங்கி குப்பைக்கு தான் போகிறது.




மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Local Body Election 2022 | நகைப்புக்கு இடமானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டம் !


50 செண்ட் முள்ளங்கி விவசாயத்திற்கு 10 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்யும் நிலையில். முள்ளங்கி கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே அரசு உரம் மற்றும் மருந்து விலைகளை கட்டுப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்" என்றார்.




வானம் பார்த்த பூமியாக பார்க்கப்படும் சிவகங்கை மாவட்டத்தில் சவாலை சமாளித்து விவசாயம் செய்கின்றனர் மாவட்ட விவசாயிகள். இந்நிலையில் உரம், மருந்து, கூலி உயர்வு காரணமாக  விவசாயத்தை கைவிடும் சூழலுக்கு தள்ளப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்  விவசாயிகள். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - madurai | ’அ.தி.மு.க.வில் தலைமை கிடையாது; தற்போது உள்ளவர்கள் வழிநடத்தும் நபர்கள்’ - செல்லூர் ராஜூ !