மலத்தில் ரத்தம்; ஆபத்தா, அறிகுறியா? என்ன காரணங்கள்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

நம் உடலில் இருந்து வெளியேற்றப்படும் மலத்தில், ரத்தம் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு என்னென்ன காரணங்கள்? விரிவாக பார்க்கலாம்.

மூலம்

மலத்தில் ரத்தம் வருவதற்கு பைல்ஸ் எனப்படும் மூலம் முக்கிய காரணம். பைல்ஸால் மலச்சிக்கல் ஏற்பட்டு, கட்டி கட்டியாக மலத்துடன் ரத்தம் சேர்ந்து வரலாம்.

ஆசனவாய்ப் பிளவு

மலச்சிக்கல், கடினமான மலத்தால் ஒருவரின் ஆசனவாய் பகுதியில் ஏற்படும் சிறு பிளவு அல்லது கிழிசல் காரணமாக மலத்தில் ரத்தம் வெளியாகலாம். அப்போது கடுமையான வலியும் இருக்கும்.

அழற்சி குடல் நோய் (IBD)

இதனால் உடல் எடை குறையும். வாரக்கணக்கில் வலி நீடிக்கலாம். இந்த நீண்டகால நிலை செரிமானப் பாதையின் சில பகுதிகளை வீக்கப்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாலியல் ரீதியாக பரவும் தொற்று

கோனோரியா, கிளமிடியா, சிஃபிலிஸ் மற்றும் ஹெர்பெஸ் போன்ற பால்வினை நோய்கள் உங்கள் பின்பகுதியில் வீக்கம் மற்றும் ரத்தப் போக்கை ஏற்படுத்தும். ஆசனவாய் உடலுறவாலும் ரத்தப் போக்கு ஏற்படலாம்.

பெப்டிக் அல்சர்

இது வயிறு அல்லது சிறுகுடலின் மேல் முனையின் உள் பகுதியில் உருவாகும் அல்சர் ஆகும். பல வயிற்றுப் புண்கள் பாக்டீரியாவின் தொற்று காரணமாக ஏற்படுகின்றன. இது அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவுகிறது. சில அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் நீண்டகால பயன்பாடும் அல்சரை ஏற்படுத்தலாம்.

கட்டிகள் அல்லது புற்றுநோய்

கட்டிகள் அல்லது பெருங்குடல் புற்றுநோய் காரணமாக மலத்துடன் ரத்தம் வெளியேறலாம். இது பெரும்பாலும் சாதாரண கண்ணால் கண்டுபிடிக்க முடியாத வகையில் ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

இவை அனைத்தும் பொதுவான கருத்துகளே. சரியான, முறையான தீர்வுக்கு உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.