லீட்சில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் 59 ரன்கள் சேர்த்து ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு, விராட் கோலி பேட் செய்ய வருவதற்குள், இந்தியாவின் நான்காவது பேட்ஸ்மேனாக வெள்ளையர் ஒருவர் களமிறங்கியதை கண்டு ரசிகர்கள், நடுவர்கள், வீரர்களே திகைத்துப் போயினர்.


ஜார்வோ எனப்பெயர் எழுதப்பட்டிருந்த 69-ம் எண் இந்திய சீருடை அணிந்த அந்த நபர் பேட்ஸ்மேன்கள் அணிவது போல் பேட், கையுரை, ஹெல்மெட் அணிந்து தொழில்முறை வீரரை போல் மைதானத்துக்குள் நுழைந்தார். அவரை மைதானத்தின் மையப் பகுதிக்குள் செல்ல விடாமல் பாதுகாவலர்கள் தடுத்து வெளியேற்றினர்.


இதே ஜார்வோ லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக்கொண்டு இருந்தபோதும், இந்திய சீருடையுடன் உள்ளே சென்றுள்ளார். அவரை கண்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வயிறு குழுங்க சிரித்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நபர், ”நான் தான் ஜார்வோ. மைதானத்தின் பிட்ச் அருகே சென்றது நான் தான். இந்திய கிரிக்கெட் அணியில் முதல் வெள்ளை வீரர் என்பதில் பெருமை அடைகிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.”






தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!


நேற்றும் ஜார்வோ இதே போல், மைதானத்துக்குள் சென்ற வீடியோ வைரலானதால் இங்கிலாந்து ரசிகர்கள் ஜார்வோவை லெஜண்ட் என கொண்டாடி வருகின்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய வீரர்களை மிக மோசமாக மைதானத்திலேயே விமர்சித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜெர்சியுடன் மைதானத்துக்குள் இருமுறை புகுந்த ஜார்வோ தான் இங்கிலாந்தின் ரீசண்ட் டிரண்ட்.


அதே சமயம் ஒரே நபரால் இருமுறை மைதானத்துக்குள் அத்துமீறி உள்ளே செல்ல முடியும் என்றால் இங்கு வீரர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இந்தியாவில், மைதானத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு இருக்கும் என்பதால் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடம் இருக்காது.


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், டார்ட்சில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், தற்போது லீட்ஸில் இந்தியா இங்கிலாந்து அணிகள் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.






முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்குள் சுருண்டது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை சேர்த்து உள்ளது. ரோகித் சர்மா 58 ரன்களும், கே.எல்.ராகுல் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்துள்ள நிலையில், புஜாரா 91 ரன்களுடனும், விராட் கோலி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.