காபூல் விமான நிலைய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் படை ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் மீது ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 13 அமெரிக்கர்கள் உட்பட 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., தாக்குதலை தாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்த நிலையில் தற்போது இந்தத் தாக்குதல் நடைபெற்று உள்ளது.




அமெரிக்கப் படை வருகின்ற 31ந் தேதிக்குள் ஆஃப்கானிலிருந்து புறப்பட வேண்டும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்த படை தற்போது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. வெடிகுண்டுச் சம்பவத்தை அடுத்து அமெரிக்கப் படைகளை விரைந்து புறப்படும்படி ஆஃப்கன் நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக, காபூல் விமான நிலைய குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பலி எண்ணிக்கை 200 வரை உயர்ந்துள்ளதாக காபூலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு இரட்டை வெடிகுண்டுத் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியது. இதில் 13 மூன்று அமெரிக்க படையினர் மற்றும் பல ஆஃப்கான் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் நடந்ததாக அங்கிருந்து வரும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஃப்கன் பத்திரிகையாளர்கள் பகிர்ந்துள்ள வீடியோக்களில் காபூல் விமானநிலையத்தைச் சுற்றியுள்ள கால்வாயில் சடலங்கள் மிதப்பது பதிவாகியுள்ளது. இதற்கிடையே இந்த பயங்கரத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அமெரிக்கர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்களையும் அவர்களுக்கு உதவியவர்களையும் தாக்கவே இந்த தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புதான் இந்த தாக்குதலுக்குக் காரணம் என முன்னதாக அமெரிக்கத் தரப்பும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தாக்குதல் நடத்தியவர்களை மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம் தக்க பதிலடி தருவோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.


 


கடந்த சில தினங்களுக்கு முன்பே மேற்கத்திய நாடுகள், காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு விபத்திற்கு வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. காபூல் விமான நிலையத்திற்கு தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக பல நாட்டு விமானங்களும் வந்து செல்வதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் எச்சரித்திருந்தனர்.




இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி,  ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் விமான நிலையத்தின் நுழைவு வாயிலிலும், மற்றொரு குண்டு வெடிப்பு அங்கிருந்த ஹோட்டலில் இருந்து சற்று தொலைவிலும் நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஒரு கைக்குழந்தையும் உயிரிழந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அங்குள்ள ஊடகங்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிக் ஸ்டேட் (Islamic State) அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா அதிகாரி ஒருவர் அசோஸியேட் பிரஸ் செய்தி தளத்திடம் தெரிவித்தார்.   ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைக்கும் மக்களை ஏற்கனவே தலிபான்கள் தடுத்து நிறுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டு மக்கள் தங்களது நாடுகளுக்கு திரும்புவதற்காகவும், ஆப்கான் மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் அடைவதற்காகவும் தினசரி விமான நிலையத்தில் கவிந்து வருகின்றனர்.