டோக்கியோ பாராலிம்பிக் பாரா பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆடவர் எஸ்.எல் 4 பிரிவு பாரா பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சுஹேஷ் யாத்திராஜ் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார். 


இந்நிலையில் இன்று அவர் இறுதி போட்டியில் இந்த பிரிவில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து விளையாடினார். சுஹேஷ் யாத்திராஜ் இந்தப் பிரிவில் உலக தரவரிசையில் நம்பர் 1 வீரரை எதிர்த்து விளையாடுவதால் இப்போட்டி அவருக்கு நல்ல சவாலான ஒன்று என்று கருதப்பட்டது. இந்தப் போட்டியில்  தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுஹேஷ் யாத்திராஜ் அதன்பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார். 20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கேமை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார்.


இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமிலும் சுஹேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனினும் அந்த கேமின் இறுதியில் பிரான்சு வீரர் லூகாஸ் 21-17 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடத்தப்பட்டது.  அதிலும் இரு வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். இறுதியில் பிரான்சு வீரர் லூகாஸ் 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் சுஹேஷ் யாத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு 8ஆவது வெள்ளிப்பதக்கமாகும். 






அடுத்ததாக ஆடவர் எஸ்.ஹெச் 6 பிரிவு பாரா பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் ஹாங்காங் வீரர் சு மின் கையை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் பிரிவில் கிருஷ்ணா நாகர் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரர் என்பதால் இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெறுவார் என்று அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 


மேலும் படிக்க:‛போலியோ டூ டோக்கியோ’ உலகம் வியக்கும் இந்தியன்: உலக சாம்பியன் பிரமோத் பக்தின் கதை !