டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் முதலில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமால் ஏமாற்றம் அளித்தனர். வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 


 


இந்நிலையில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்று நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் சவுரப் சௌதரி மற்றும் அபிஷேக் வெர்மா பங்கேற்றனர். இதில் தொடக்கத்தில் இந்தியாவின் சவுரப் சௌதரி தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக செயல்பட்டார். வரிசையாக 98,99,100 என மாறி மாறி நன்றாக சுட ஆரம்பித்தார். இதன் விளைவாக 95,98,98,100,98,97 என மொத்தமாக 586 புள்ளிகள் பெற்று முதலிடம் இடத்தை பிடித்தார். அத்துடன் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல்  இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றார். 


 






மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மாவும் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும் பின்னர் சிறப்பாக முன்னேறி வந்தார். இவர்  94,96,98,97,98,92  என மொத்தமாக 575 புள்ளிகள் பெற்று 13ஆவது இடத்தை பிடித்தார். அத்துடன் இவரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இழந்தார். சவுரப் சௌதரி  மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ள இறுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 


 






முன்னதாக டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்- மானிகா பட்ரா இணை சீன் தைபே அணியிடம் 4-0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதன்மூலம் முதல் சுற்றிலேயே இந்த இணை தோல்வி அடைந்து ஏமாற்றியது. ஜூடோ பிரிவில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவியும் முதல் சுற்றில் ஹங்கேரி நாட்டின் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். 


மேலும் படிக்க:  சரத் கமல்-மானிகா, ஜூடோ வீராங்கனை சுஷிலா முதல் சுற்றிலேயே தோல்வி!