நடப்பு ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக எப்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்றாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருக்கும். நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலும் ஆர்.சி.பி. மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.


விநாயகர் கோயிலில் வழிபட்ட ஆர்.சி.பி. வீரர்கள்:


ஆனால், நடப்பாண்டில் பெங்களூர் அணி தாங்கள் ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில், வரும் 11ம் தேதி பெங்களூர் அணி மும்பை அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 234 ரன்கள் குவித்து மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பியுள்ளது. இதனால், மும்பையை பெங்களூர் எப்படி சமாளிக்கப் போகிறது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்த சூழலில், பெங்களூர் அணியின் வீரர்களான கரண் சர்மா, வைஷாக் விஜயகுமார், பிரபுதேசாய் மற்றும் லோம்ரார் ஆகியோர் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்தனர். பெங்களூர் அணி தொடர்ந்து மோசமான தோல்வியைச் சந்தித்து வருகிறது.


தொடர்ந்து சொதப்பும் பெங்களூர்:


அந்த அணியின் பந்துவீச்சு அதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும், மகிபால் லோம்ரார், பிரபுதேசாய், விஜயகுமார் ஆகியோர் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், வெளிநாட்டு வீரர் கேமரூன் கிரீனுக்கு பதிலாக வில் ஜேக்சை களமிறக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


வெற்றிப்பாதைக்கு திரும்புமா?


பந்துவீச்சில் ஜோசப், யஷ் தயாள் என யார் வீசியும் எந்த பலனும் அளிக்கவில்லை. மேக்ஸ்வெல் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மும்பை அணி கடந்த போட்டியில் மிரட்டலாக ஆடியிருப்பது மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அணியில் விராட் கோலி மட்டும் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். மற்ற வீரர்கள் சொதப்பி வருகின்றனர். ஆரஞ்சு தொப்பியை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு விராட் கோலி வசம் இருந்தாலும் பெங்களூர் அணி, 4 போட்டிகளில் தோல்வி அடைந்து பரிதாப நிலையில் உள்ளது. இனி வரும் போட்டிகளில் பெங்களூர் தனது வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் பெங்களூர் அணி 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. 


மேலும் படிக்க: Hardik Pandya: ”இதனால தான் 2 போட்டில நான் ஓவர் போடல” - மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளக்கம்


மேலும் படிக்க: Faf Du Plessis: ”கடைசி ஓவர்களில் விராட் அதிக ரன்களை எடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம்” - டூ ப்ளெசிஸ் ஓபன் டாக்