ஐ.பி.எல் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 68 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் லீக் போட்டிகள் நடைபெறும் கடைசி நாளான, இன்று முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.


ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வா தைடே மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார். இவர்களது ஜோடி 91 ரன்களை வரை களத்தில் நின்றது. அப்போது அதிரடியாக விளையாடி வந்த அதர்வா தைடே விக்கெட்டை பறிகொடுத்தார். 27 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 46 ரன்கள் குவித்தார்.


215 ரன்கள் இலக்கு:


பின்னர் பிரப்சிம்ரன் சிங் உடன் ரிலீ ரோசோவ் இணைந்தார். இச்சூழலில் அதிரடியாக விளையாடி அரைசத்ததை பதிவு செய்தார் பிரப்சிம்ரன் சிங். இவர் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 71 ரன்களை குவித்தார். இதனிடையே அரைசதம் விளாசுவார் என்று எதிர்பர்க்கப்பட ரிலீ ரோசோவ் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 49 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்னர் வந்த ஜிதேஷ் ஷர்மா ஓரளவிற்கு நிதானமாக விளையாடினாலும் அடுத்த வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது.


அரைசதம் விளாசிய அபிஷேக் ஷர்மா:


சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் அணி 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களம் இறங்கினார்கள். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ட்ராவிஸ் ஹெட் போல்ட் ஆகி டக் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் அபிஷேக் ஷர்மா உடன் ஜோடி சேர்ந்தார் ராகுல் திரிபாதி.


இவர்களது ஜோடி அதிரடியாக விளையாடியது. அப்போது ராகுல் திரிபாதி 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் அபிஷேக் ஷர்மா. அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த அவர் ஷஷாங்க் சிங் பந்தில் அவுட் ஆனார். மொத்தம் 28 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 66 ரன்களை குவித்தார்.


பின்னர் களம் இறங்கிய நிதிஷ் ரெட்டியும் சிறப்பாக விளையாடினார். 25 பந்துகள் களத்தில் நின்ற 1 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 37 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்தனர் ஹென்ரிச் கிளாசென் மற்றும் ஷாபாஸ் அகமது. இவ்வாறாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.