இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, பர்மிங்காமில் நடைபெற்றுவரும் 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. ஏற்கனவே முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், 2-வது இன்னிங்சிலும் சதமடித்து அசத்தியுள்ளார். அதோடு, ஒரு வரலாற்று சாதனையும் படைத்துள்ளார்.
கேப்டன் சுப்மன் கில் செய்த சாதனை என்ன.?
இந்த 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 587 ரன்களை குவித்தது. அதில், கேப்டன் சுப்மன் கில் மட்டுமே 269 ரன்களை குவித்தார். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்து, தற்போது இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது.
இந்த 2-வது இன்னிங்சிலும் கேப்டன் சுப்மன் கில் சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம், இந்த ஒரு போட்டியில் மட்டுமே பிற்பகல் தேனீர் இடைவேளை வரை 369 ரன்களை அவர் குவித்திருந்தார். இதுதான் தற்போது படைக்கப்பட்டுள்ள வரலாற்று சாதனை.
ஆம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு இன்னிங்சில் அதிகபட்ட ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைத் தான் சுப்மன் கில் படைத்துள்ளார்.
இதற்கு முன், சுனில் கவாஸ்கர் ஒரே போட்டியில் 344 ரன்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். 3-வது இடத்தில் 340 ரன்களுடன் விவிஎஸ் லட்சுமணனும், 4-வது இடத்தில் 330 ரன்களுடன் சவுரவ் கங்குலியும், 5-வது இடத்தில் 319 ரன்களுடன் வீரேந்திர சேவாக்கும் உள்ளனர்.
2-வது டெஸ்ட் போட்டி இதுவரை...
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும், ஜெய்ஷ்வால் 87 ரன்களும் குவித்தனர்.
இங்கிலாந்து தரப்பில், பஷீர் 3 விக்கெட்டுகளையும், வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளையும் குவித்தனர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமலும், ஹாரி ப்ரூக் 158 ரன்களும் அடித்தனர்.
இந்திய தரப்பில், அற்புதமாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 180 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை ஆடிய நிலையில், 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை சேர்த்திருந்தது. தொடர்ந்து இன்று 4-வது இன்னிங்சை ஆடி வருகிறது.
பிற்பகல் தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்து 304 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 100 ரன்களுடன் கேப்டன் சுப்மன் கில்லும், 15 ரன்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் களத்தில் இருந்தனர்.