IPL 2023: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கடந்த இரண்டு மாதங்களாக உச்சரித்துக்கொண்டு இருக்கும் வார்த்தை ஐபிஎல். 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இந்தியன் பிரிமியர் லீக் இந்த ஆண்டுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உலகமே உற்று நோக்கும் கிரிக்கெட் லீக் போட்டியாக இந்த தொடர் இருக்க காரணம், பல இளம் வீரர்களை அடையாளப்படுத்துகிறது. மேலும், கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒரு சில போட்டிகளில் எதிரணிக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்ட நிகழவுகள் எல்லாம் அரங்கேறியுள்ளது.


ஐபிஎல் தொடரில் கவனிக்கப்படும் அணிகளில் ஒன்று, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians). இந்த தொடரில் இந்த அணிக்கு மிகவும் கடினமானதாக இருந்த விஷயம் பவுலிங் தான். அது தற்போது வரை இந்த அணிக்கு பிரச்சனையாக உள்ளது. இதனாலே மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் டாஸ் வென்ற போட்டிகளில் முதலில் பெரும்பாலும் பந்து வீச்சையே தேர்வு செய்தார். இதனாலே மும்பை அணிக்கான ப்ளேயிங் லெவன் என்பது சரியாக அமையவில்லை. முதலில் அணியில் சேர்க்கப்பட்ட அர்ஜுன் தெண்டுல்கர் சொதப்ப, அதன் பின்னர் மாத்வால் இணைக்கப்பட்டார்.  ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதி லீக் போட்டியில் மும்பைஅணி வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒருவர் மாத்வால் தான்.  அதேபோல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ச்சர் காயத்தால் சிறப்பாக பந்து வீச முடியாமல் சொதப்ப, அவருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட ஜோர்டன் களமிறங்கியது முதல் மோஸ்ட் எக்ஸ்பென்ஷிவ் பவுலராகத்தான் உள்ளார். 




இப்படியான மும்பை அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஐபிஎல் சதத்தினையும் பதிவு செய்திருந்தார். 


அடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஜோடியையும் மிடில் ஆர்டரில் இறங்கிய மில்லரை மாத்வால் வெளியேற்ற, சாவ்லா மற்றும் பெஹரண்டார்ஃப் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெளியேற்றினார். இதனால் குஜராத் அணி 103 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையைப் பார்க்கும் போது மும்பை அணி எளிதில் வெற்றி பெறுவதுடன், நல்ல ரன்ரேட்டுக்கு முன்னேறும் என கருதப்பட்டது. ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய ரஷித் கான் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார்.




13வது ஓவரின் இரண்டாவது பந்தில் களமிறங்கிய ரஷித் கானின் ருத்ரதாண்ட ஆட்டத்தினைப் பார்க்கும் போது, மும்பை இந்த போட்டியில் வெற்றி பெறுமா எனும் சந்தேகம் எழும் அளவிற்கு இருந்தது. இறுதி வரை களத்தில் இருந்த அவர் 32 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரி 10 சிக்ஸர்கள் விளாசி 79 ரன்கள் சேர்த்தார். பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்து வீச்சிலும் அசத்தியிருந்தார் ரஷித் கான். 4 ஓவர்கள் வீசிய இவர் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.




இறுதியில் இந்த போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  ரஷித் கான் மட்டும் இன்னும் கூடுதலாக 10 பத்து பந்துகளை எதிர்கொண்டிருந்தால் போட்டியின் முடிவு குஜராத் அணிக்கு சாதகமாக இருந்திருக்கும்.  சூர்யகுமாரின் சதமும் வீணாகப் போயிருக்கும். 




மேலும் படிக்க., 


IPL 2023: மறக்குமா நெஞ்சம்..! அடுத்தடுத்து சதங்கள்.. ஆனாலும் வீண்.. உடைந்து நொறுங்கிய விராட் கோலி..!


மேலும் படிக்க., 


IPL 2023: மறக்குமா நெஞ்சம்..! ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷித் கான்; 5 சிக்ஸர்கள் பறக்கவிட்ட ரிங்கு சிங்